அறிவு மற்றும் பண்பு மிக்க சமூகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த பட்டப் படிப்பு பிரிவின் புதிய கட்டிடத்தை இன்று (31) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
வாழ்க்கைப் போராட்டத்தை வெற்றிகொள்ள புத்த பெருமானின் போதனைகள் மிக முக்கியமானது. அத்தகைய தர்மத்தின் ஆழத்தை அறிந்து அதனை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தேரவாத பௌத்தத்தின் கேந்திர நிலையமாக விளங்கும் இலங்கையைச் சார்ந்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதற்காக தேரவாத பௌத்த ஆய்வு நிறுவனம் ஒன்றை நிறுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறான நிறுவனங்களுக்கு தேரவாத பௌத்தத்தை உலகிற்கு கொண்டுச் செல்லவும், பௌத்த நாடுகளுடனான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வதற்குமான இயலுமை உள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப யுகத்திற்கு தேவையான வகையில் இலங்கையின் கல்வியை பலப்படுத்த எதிர்பார்ப்பதோடு, அனைத்து பல்கலைக்கழங்களிலும் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறிகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக மேலும் தெரிவித்தார்.
அத்துடன், பாலி மற்றும் பௌத்த பட்டப் படிப்பு நிறுவனத்தில் கற்கும் மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க மாணவர் விடுதியொன்றை நிர்மாணிப்பதற்கான காணியையும் அரச அனுசரணையும் வழங்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்போது புதிய கட்டிடம் நிர்மாணிப்பதற்கு உதவிய வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவு பரிசுகள் வழங்கினார்.










