இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (TO LAM) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (08) பிற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
இங்கு வியட்நாம் ஜனாதிபதியை மிகவும் அமோகமாக வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்காகத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 56 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் மேற்கொள்ளப்படும் டோ லாமின் இந்த இலங்கை விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பங்களிப்பு, நம்பிக்கை மற்றும் நட்புறவைப் பிரதிபலிப்பதாக அமைவதுடன், எதிர்காலத்தில் இரு நாட்டு உறவுகளிலும் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் என்றும் பிரதமர் இங்கு குறிப்பிட்டார்.
இரு நாட்டு மக்களுக்கும் பரஸ்பர நன்மைகள் கிடைக்கும் வகையில் பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகள் உள்ளிட்ட பன்முகக் கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதற்கும், அதனைப் பன்முகப்படுத்துவதற்கான மூலோபாயங்கள் குறித்தும் இக்கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வியட்நாமை பிரதிநிதித்துவப்படுத்தி, அரசியல் குழு உறுப்பினர், கட்சியின் மத்திய குழுச் செயலாளர் மற்றும் மத்திய ஒழுங்கமைப்புக் குழுவின் தலைவர் Nguyen Duy Ngoc, அரசியல் குழு உறுப்பினர், கட்சியின் மத்திய குழுச் செயலாளர், கொள்கை மற்றும் மூலோபாயங்கள் தொடர்பான மத்திய குழுவின் தலைவர் Nguyen Thanh Nghi, அரசியல் குழு உறுப்பினர், பிரதிப் பிரதமரும் தேசிய பாதுகாப்பு அமைச்சருமான Phan Van Giang, அரசியல் குழு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Luong Tam Quang, அரசியல் குழு உறுப்பினர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் Le Hoai Trung உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.










