இத்தாலி கால்பந்து அணியின் புகழ்பெற்ற தற்காப்பு ஆட்டக்காரரும் (Defender), ஏசி மிலன் (AC Milan) அணியின் முன்னாள் தலைவருமான பிரான்கோ பரேசி (Franco Baresi) வெள்ளிக்கிழமை (31) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 66 ஆகும்.
தனது 20 ஆண்டுகாலப் தொழில்முறை கால்பந்து வாழ்க்கையையும் ஏசி மிலன் அணிக்காக மட்டுமே அர்ப்பணித்த அவரது மறைவை கிளப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், அவரது இறப்பிற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
“ஏசி மிலனின் ஒட்டுமொத்த வரலாறும் கண்ணீரில் மூழ்கியுள்ளது” என்று அந்த அணி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், பரேசிக்கு நுரையீரலில் ஏற்பட்ட கட்டி அகற்றப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ‘மிலானோ கார்ட்டினா’ குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில், தனது சகோதரரும் இன்டர் மிலன் அணியின் முன்னாள் வீரருமான ஜூசெப் பரேசியுடன் இணைந்து ஒலிம்பிக் சுடரைச் ஏந்திச் சென்றார்.
ஒரே கிளப் அணியின் வரலாற்று நாயகன்
சிறந்த தற்காப்பு ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் பரேசி, ஏசி மிலன் இளையோர் அணியிலிருந்து வளர்ச்சி பெற்று, 1978 ஏப்ரலில் தனது 17ஆவது வயதில் முதன்மை அணியில் அறிமுகமானார்.
ஏசி மிலன் அணி இரண்டாம் தரப் போட்டிக்கு (Serie B) தள்ளப்பட்ட போதும், அணியை விட்டு விலகாமல் உறுதியாக நின்ற அவர், தனது 22ஆவது வயதிலேயே அணியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
மிலன் அணிக்காக 700 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய பரேசி, மூன்று சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள், ஆறு ‘சீரி ஏ’ (Serie A) பட்டங்கள் உள்ளிட்ட பல உலகளாவிய வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். 1982 இல் உலகக்கோப்பையை வென்ற இத்தாலி அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
அவரது ஓய்வுக்குப் பிறகு (1997), அவர் அணிந்த ‘6’ ஆம் இலக்க சீருடைக்கு கௌரவமளிக்கும் வகையில், அந்த இலக்கத்தை வேறு எந்த வீரருக்கும் வழங்காமல் ஏசி மிலன் அணி ஓய்வு அளித்தது. இது இத்தாலியக் கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக நிகழ்ந்த ஒன்றாகும்.
அவரது மறைவுக்கு இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இத்தாலியக் கால்பந்து சம்மேளனத் தலைவர் மற்றும் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.










