இலங்கையில் வீதி விபத்துக்கள் காரணமாக 2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 115 சிறுவர் மரணங்கள் இடம்பெற்றுள்ளன என்று வீதி விபத்துக்களை தடுப்பதற்கான நிபுணத்துவ குழுவின் தலைவர் பேராசிரியர் சமன் தர்மரத்ன தெரிவித்தார்.
கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெற்ற “Safe Roads – Safe Children” சர்வதேச மாநாட்டில் இன்று (01) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
வீதி விபத்துக்களால் உலகின் ஏதாவது ஒரு இடத்தில் 42 செக்கன்களுக்கு ஒரு முறை மரணமொன்று ஏற்படுகிறது. இருப்பினும் உயர் வருமானம் ஈட்டும் நாடுகளில் வீதி விபத்துக்கள் காரணமான ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது.
இலங்கையில் வீதி விபத்துக்கள் காரணமாக 2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 115 சிறுவர் மரணங்கள் இடம்பெற்றுள்ளன. 15-44 இளைஞர்களே வீதி விபத்துக்களில் இறக்கின்றமை அல்லது அங்கவீனமாவதை காண முடிகிறது. அத்தோடு வருடாந்தம் 3000 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பதோடு அந்த எண்ணிக்கை வருடாந்தம் அதிகரிப்பை காட்டுக்கிறது.
அவற்றை ஒப்பீட்டளவில் பார்க்கும் போது எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கிலான மரணங்களும், அங்கவீனமடைதலும் வீதி விபத்துக்களினால் நிகழ முடியும் என்பதோடு, அதனால் பல பில்லியன் ரூபாய்களை நாடு இழக்க நேரிடும்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு வீதி விபத்துக்களையும் அதனால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனம் அடைதலையும் கட்டுப்படுத்துவதற்கான செயலணியொன்றை உருவாக்க வேண்டும்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, தேசிய மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவர் விஷேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, இலங்கை மருத்துவச் சங்கத்தின் தலைவர் வின்யா ஆரியரத்ன ஆகியோருடன் சுகாதார, தொழில்நுட்ப, பொறியியல், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தியும் முப்படையினர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உறுப்பினர்கள், ஐக்கிய நாடுகள் சபை, யுனிசெப், செஞ்சிலுவை உள்ளிட்ட சர்வதேச சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.










