ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று இரவு 8 மணிக்கு பார்டாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப் போட்டியில் கால்பதித்து உள்ளன. இந்திய அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களில் வெற்றி கண்ட நிலையில் கனடாவுக்கு எதிரான கடைசி ஆட்டம் மழை காரணமாக ரத்தாயிருந்தது.
சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியானது வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளை தோற்கடித்தது. தொடர்ந்து அரை இறுதியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்முழுவதுமே இந்திய அபாரமான செயல் திறனைவெளிப்படுத்தி சிறந்த பார்மில் உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி லீக் மற்றும் சூப்பர் 8சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தது. எனினும் லீக் சுற்றில் நெதர்லாந்து,வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டத்தை நெருக்கமாககொண்டு சென்றே வெற்றியை வசப்படுத்தியிருந்தது. இதேபோன்று சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் போராடியே வெற்றி கண்டது.
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்திலும் கடைசி ஓவரிலேயே வெற்றி பெறமுடிந்தது. இந்த 7 ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்க அணி நெருக்கடியான தருணங்களில் சிறப்பாக செயல்பட்டிருந்தது. ஆனால் அரை இறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை கடும் சிதைவுக்கு உட்படுத்தி வெற்றி கண்டு வரலாற்றில் முதன் முறையாக இறுதிப் போட்டியில் கால்பதித்தது.
டி 20 உலகக் கோப்பையின் அறிமுக தொடரான 2007-ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியஅணி அதன் பின்னர் ஒரு முறை கூட மகுடம்சூடவில்லை. அதேவேளையில் ஐசிசி தொடர்களில் கடைசியாக இந்திய அணி 2013-ம்ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்தது. அதன் பிறகு 11 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று ஏமாற்றம் அடைந்தது. இம்முறை இந்திய அணி தடைகளை கடந்து கோப்பை வறட்சியை போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.