வைத்தியரை பணி இடைநீக்கம் செய்தமை அநீதி!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டது அநீதியான நடவடிக்கை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (19) கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மேலும் கூறியவை வருமாறு,

“புதிய அரசமைப்பு இயற்றப்படும்போது கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் அவசியம்.

ஏனெனில் மருந்து மாபியா உட்பட சுகாதார சேவையில் நிலவும் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கினார் என்பதற்காகவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது. அநீதியான நடவடிக்கையாகும்.

தரம் குறைவான மருந்து மற்றும் சுகாதாரத்துறையில் நடக்கும் ஊழல், மோசடிகள் தொடர்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் அவருக்கு இல்லையா?

தரம் குறைவான ஊசி பயன்பாட்டால் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் வாழும் உரிமை பறிபோய் உள்ளது. இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றார் எதிர்கட்சி தலைவர்.

இதற்கு பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

“ இரு மரணங்கள் தொடர்பில் கவலை அடைகின்றோம். அது தொடர்பில் விசாரணை நடக்கின்றது. விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும்.” – என்றார்.

Related Articles

Latest Articles