அடிக்கடி தாம்பத்திய உறவுக்கு கணவன் வற்புறுத்தியதாக கூறி திருமணமான 7 மாதத்தில் கணவனுக்கு உணவில் விஷம் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 33). இவருக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் சொந்தமாக உள்ளது. விவசாயம் செய்துகொண்டு அந்தியூர் ஜீவா செட் பகுதியில் உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 7 மாதங்கள் முன்பு திருமணமாகி தனது மனைவி மைதிலியுடன் (வயது 20) அந்தியூர் காலனியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 28ஆம் திகதி காலை தனது தோட்டத்தில் விவசாய பயிர்களுக்கு மருந்து அடித்துவிட்டு பின்னர் வீட்டில் காலை உணவு சாப்பிட்டுள்ளார். அப்பொழுது உணவு கசப்பாக இருக்கவே மனைவியிடம் இதுபற்றி கேட்டுவிட்டு அதிகம் சாப்பிட முடியாமல் சிறிது சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார். வேலைக்கு சென்ற இடத்தில் தான் கொண்டுவந்த மதிய உணவை எடுத்து சாப்பிடும் பொழுது மீண்டும் கசப்பாக உள்ளது என்று சொல்லி கீழே கொட்டி விட்டதாக தெரிகிறது.
உடலில் மாற்றங்கள் தெரியவே கடந்த 31ஆம் திகதி அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர் உடலில் விஷம் இருப்பதாக கூறவே, மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி அதிகாலை சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
இந்நிலையில் நந்தகுமார் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது தனது மனைவி தனக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்திருக்கலாம் என வாக்குமூலம் கூறியதாக தெரிகிறது. போலீசார் நந்தகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மைதிலியிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்களை அவர் கொடுத்திருக்கிறார்.
தான் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், இந்நிலையில் அவருடைய கணவர் நந்தகுமார் தன்னை இரவு பகல் பாராமல் தாம்பத்திய உறவு வைத்து அடிக்கடி தொந்தரவு செய்துகொண்டே இருந்ததாகவும் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்து உணவில் விஷம் வைத்து கொடுத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து மைதிலி மீது கொலை வழக்குப்பதிவு செய்த அந்தியூர் போலீசார் மைதிலியை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.