பசறை கோணக்கலை தமிழ் தேசிய பாடசாலை அதிபர் சின்னையா நவரட்ணராஜா, அதிபர் சேவையிலிருந்து இன்று ஓய்வுபெறுகின்றார்.
இவர் 1961 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி திரு.திருமதி சீரங்கன் சின்னையா – வேலு முத்தாளம்மாள் தம்பதிகளின் மூன்றாவது மகனாக லுணுகல ஊரில் பிறந்தார். இவர் தனது கல்வியை லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் கற்றார்.
தனது பாடசாலை கல்வி நிறைவடைந்த பின்னர் மலைய பெருந்தோட்ட பாடசாலை வரலாற்றில் சீடா நிறுவனத்தின் அனுசரணையில் பி.எஸ்.டி.பி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆசிரியர் சேவைக்கு இவர் 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வாறு நியமனம் பெற்ற இவர் 1986 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் ஆசிரியர் சேவையில் நிரந்தர நியமனம் பெற்றார். இவ்வாறு ஆசிரியராக தன் பணியை சோலண்ட்ஸ் மேற்பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பித்தார்.
ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றில் உயர்கற்கை நெறிகளை தொடர்ந்த இவர் கல்விமானிப்பட்டம், கல்வி முகாமைத்துவ பட்டப்பின் டிப்ளோமா , கல்வி முதுமானி பட்டம் ஆகியவற்றையும் பெற்று தன்னை வாண்மைத்துவமிக்கவராக வளப்படுத்திக்கொண்டார்.
இவர் 1993 ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் திகதி அன்று இலங்கை அதிபர் சேவைக்கு
(தரம் மூன்று ) தெரிவாகினார்.
இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு தனது அர்ப்பணிப்புமிக்க அறப்பணியால் தனது முதல் நியமன பாடசாலை வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் சேவையாற்றினார்.இவர் 1993 ஆம் ஆண்டு டிசம்பர் வரை கடமையாற்றினார்.
இதனை தொடர்ந்து ஹொப்டன் கலைமகள் தமிழ் வித்தியாலயத்திற்கு அதிபராக தெரிவு செய்யப்பட்டார். இவர் இப்பாடசாலைக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தனது உயரிய தலைமைத்துவ அறப்பணியால் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றினார்.
அத்தோடு இப்பாடசாலை பௌதிக வள வகுப்பறை கட்டடங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அயராது பாடுபட்டார். இவரது தலைமைத்துவ பதவி காலத்தில் கலைமகள் தமிழ் மகா வித்தியாலயம் கல்வித்துறையில் புதிய பரிணாம வளர்ச்சிப் பெற்றது.
குறிப்பிட்ட காலப்பகுதிகளில் கல்வி பொதுதராதர சாதாரணப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பசறை கல்வி வலய பாடசாலைகளில் முதன்மை பெறுபேறு பெற்ற பாடசாலையாக திகழ்ந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறாக சிறப்பாக சேவையை முன்னெடுத்த அதிபர் சி.நவரட்ணராஜா அவர்கள்
2006 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி இலங்கை அதிபர் சேவையில் தரம் ஒன்றிற்கு பதவி உயர்வு பெற்றார்.
இக்காலப்பகுதியில் பசறை கல்வி வலய பாடசாலைகளில் முன்னோக்கிய வளர்ச்சி பாதையில் தடம்பதித்த கோணக்கலை தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் நா. இளங்கோபன் அவர்களின் மறைவிற்கு பின்னர் குறித்த பாடசாலையின் அதிபர் வெற்றிடத்திற்கு பொருத்தமான தலைமைத்துவ ஆளுமைமிக்க அதிபராக சி.நவரட்ணராஜா 2006 ஆம் ஆண்டு முதல் தெரிவு செய்யப்பட்டு இன்றுவரை சுமார் பதினாறு வருடங்கள் அறப்பணியாற்றிவிட்டு கல்வி சேவையிலிருந்து பணி ஓய்வு பெறுகின்றார்
இவரது வருகையின் பின்னர் ஓரிரு ஆண்டுகளில் கோணக்கலை தமிழ் வித்தியாலயம் தடைகள் பலவற்றை தகர்த்தெறிந்து கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயமாக தரம் உயர்வு பெற்று படிப்படியாக கல்வித்துறையில் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிப்பதை காணலாம்.
ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி வேலைதிட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயம் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடைநிலைப்பாடசாலையாக தரம் பெற்றதோடு கடந்த 2020 ஆம் ஆண்டு தேசியப்பாடசாலையாக பிரேரணை செய்யப்பட்டு இவ்வருடம் தேசியப் பாடசாலையாக பரிணாமம் பெற்றுள்ளது.
அதிபர் சி. நவரட்ணராஜா அவர்களின் உயரிய சேவையால் பாடசாலையின் கல்வித்துறையில் சாதனை படைத்து வருகிறது. இவரது காலப்பகுதியில் பல்கலைக்கழகம், கல்வியியற் கல்லூரிகளுக்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதோடு பாடசாலை சமூகமும் வளர்ச்சியடைந்துள்ளதைக் காணமுடிகிறது.
சுமார் 35 வருடங்கள் அதிபர் சேவையில் தலைசிறந்த பங்களிப்பை வழங்கியதோடு கல்வி சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றிய மகத்தான மனிதர் அதிபர் சி. நவரட்ணராஜா அவர்களின் சேவைநலனைப் பாராட்டி, மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பாராட்டு நிகழ்வுகளை நடாத்தியதோடு கண்ணீர் மல்க பிரியாவிடையளித்தனர். இத்தகைய உயரிய பணியாற்றி கல்வி சேவையிலிருந்து விடைபெறும் அதிபருக்கு கல்வி சமூகத்தினர் சார்பில் வாழ்த்துகள் உரித்தாகட்டும் !
நடராஜா மலர்வேந்தன்