மின்சாரம், எரிபொருளை பொறுப்புடன் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

எரிபொருளையும், மின்சாரத்தையும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் நாளை முடிவுக்கு வந்தால்கூட எரிசக்தி கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தால் எரிபொருள் சார்ந்த பிரச்சினை இருக்கவே செய்யும் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ எரிபொருள் மற்றும் மின்சாரத்தை நாம் அனைவரும் சிக்கனமாக – பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.

நாட்டில் QR நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் துறையினரிடமும் இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்சாரம் மற்றும் எரிபொருளை பொறுப்புடன் பயன்படுத்துமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

திறைசேரி மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்தால் தாங்கக்கூடிய அளவை தாங்கிக்கொண்டே எரிபொருள் விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

நெருக்கடியான சூழ்நிலையின்போது கறுப்பு சந்தையும் தோற்றம்பெறும். அவ்வாறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

QR முறைமையை முறைகேடாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தேவையான எரிபொருளை எவராவது முறைகேடாக சேமிக்க முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles