“ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊரில் வெற்றிகரமாக கூட்டத்தை நடத்தி எமது அரசியல் பலத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2026 ஆம் ஆண்டுக்குரிய முதலாவது கூட்டத்தை ஜனாதிபதியின் சொந்த ஊரிலேயே (தம்புத்தேகம) நடத்தி காட்டினோம்.
இக்கூட்டத்தை நடத்துவதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. கொடி நடுவதற்குகூட இடமளிக்கப்படவில்லை. ஆனால் மக்கள் அணிதிரண்டுவந்து சிறந்த பதிலை வழங்கினர்.
அதேவேளை, அநுரகுமார திஸாநாயக்கதான் ஜனாதிபதி என்பதை நாம் ஏற்கின்றோம்.
அவருக்கு பின்னால் ஜே.வி.பியினர் மற்றும் அக்கட்சியினருடன் தொடர்புடையவர்களுக்கு இந்நாட்டில் ஜனாதிபதி பதவிக்கு வரமுடியாது.
பொய்களை நம்பி ஏமாந்தது போதும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். எனவே, நாட்டை நேசிக்கக்கூடிய ஒருவரை மக்கள் தெரிவுசெய்வார்கள்.” -எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.










