அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள இராமர் பாதம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது (படங்கள்)

அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள இராமர் பாதம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவில் அயோகத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இராமர் ஆலயத்தில் , எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி பிரதிஷ்டை செய்யப்படவுள்ள இராமர் பாதமே அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அங்கு விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு மீண்டும் இந்தயாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்திய ராஸ்ரிய கவி சங்கத்தின் தலைவர் ஜெகதீஸ் மிட்டல் தலைமையிலான குழுவினர் இராமர் பாதத்தை இலங்கைக்கு எடுத்து வந்தனர். இந்த குழுவில் 21 உறுப்பினர்கள் அங்கம் வகித்ததுடன் இவர்கள் அனைவரும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்தனர்.

இராமர் பாதத்தின் பாத யாத்திரை சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன், இதற்கான எற்பாடுகளை சீதையம்மன் ஆலயத்தின் நிர்வாக செயலாளர் முரளீந்திரகுமார் உறுப்பினர் சுப்பிரமணியம், தியாகு உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடு செய்திருந்ததுடன் பூஜைகளின் பின்பு பாதயாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தியாவின் அயோத்தி நகரில் இருந்து கொண்டுவரப்பட்ட இராமர் பாதமானது இலங்கையில் சீத்தாஎலியவில் நடைபெற்ற விசேட பூஜைகளின் பின்பு இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இந்த இராமர் பாதமானது 232 இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி அயோத்தி நகருக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி இராம நவமி தினத்தன்று இந்த இராமர் பாதம் அயோத்தியில் அமைக்ப்பட்டு வருகின்ற ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்படவுள்ளது.

ஏற்கனவே அயோத்தியில் அமைக்கப்பட்டு வருகின்ற இராமர் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்வதற்காக சீதையம்மன் ஆலயத்தில் இருந்து புனித கல் அயோத்தி நகருக்கு இலங்கைக்கான இந்திய தூதுவர் மிலிந்த மொரகொட ஊடாக அனுப்பி வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இராமர் பாதம் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த இராமர் பாதமானது இரம்பொடை பக்த அனுமான் ஆலயத்தில் வைக்கப்பட்டு பூஜைகள் இடம்பெற்றதுடன் கொழும்பில் மகாபோதி தலைமை காரியாலயத்திற்கும் இந்திய அரசாங்கத்தின் பராமரிப்பில் கொழும்பில் இருக்கின்ற விவேகானந்தர் கலாச்சார நிலையத்திற்கும் கொழும்பு சின்மயா மிசன் தலைமைக் காரியாலயத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு விசேட பூஜை வழியாடுகள் இடம்பெற்று பக்தர்கள் வணங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட பின்பு தற்பொழது இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles