திருகோணமலை, மொறவெவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த அவர் திருகோணமலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதல் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்து பிரதேச சபை உறுப்பினரை தாக்கிய சந்தேக நபர், ஆட்டோவில் வந்துள்ளார். தாக்குதல் நடத்திய பின்னர் ஆட்டோவை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
மொரவெவ – நாமல்வத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய அரசியல்வாதியே தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
அரசியல் கூட்டம் ஒன்றிற்கு சென்று வீடு திரும்பி கொண்டிருக்கின்ற வேளையிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
சம்பவம் குறித்து மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
