மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்கிவிட்டு தொழில் சுமைகளை அதிகரித்து தொழிலாளர்களை உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் கம்பனிகள் வதைக்கின்றன. இது தொழிலாளர்களின் கழுத்தை நெறித்து அவர்களை கொலை செய்யும் செயலுக்கு ஒப்பானதாகும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
அத்துடன், தொழில் ஆணையாளர் அசமந்தபோக்குடன் செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் இராதாகிருஷ்ணன் எம்.பி. மேலும் கூறியதாவது,
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது எனக்கூறப்பட்டாலும், கம்பனிகளின் கெடுபிடிகள், அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
அத்துடன், ஆயிரம் ரூபா சம்பளத்தை இன்னும் ஒரு சில கம்பனிகள் வழங்கவில்லை. பல காரணங்களைக்கூறி தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்துவருகின்றது. மறுபுறத்தில் சம்பளத்தை வழங்கும் நிறுவனங்களும் தொழிலாளர்களின் கழுத்தை இறுக்கி, அவர்களை வதைத்துவருகின்றன.
இது தொடர்பாக அனைத்து பகுதிகளில் இருந்தும் எங்களுடைய தோட்ட தொழிலாளர்கள் முறைப்பாடுகளை தெரிவித்து வருகின்றார்கள். இது தொடர்பாக அவர்கள் தோட்ட நிர்வாகத்தால் கொடுக்கப்படுகின்ற தேவையற்ற நெருக்குதல் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இதன் காரணமாக தொழிலார்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய தொழிலுக்கு செல்கின்ற பொழுது அதனை ஒரு பெரும் சுமையாகவும் ஒரு அலுத்தத்துடனுமே செல்கின்றனர்.
எனவே இந்த விடயங்கள் தொடர்பாக நாங்கள் ஒரு தொழிலாளர்களின் தொழிற்சங்கம் என்ற ரீதியில் தொழில் ஆணையாளருக்கும் தொழில் அமைச்சருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளேன்.
இந்த கடிதத்தில் இந்த விடயங்கள் தொடர்பாக தோட்ட கம்பனிகளுடனும் தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றேன். ஆனால் இது இதுவரையில் இது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.இதன் மூலம் எங்களுடைய தொழிலார்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது.
கொரோனா தொற்று ஆரம்பித்த காலம் இன்று வரை தொடர்ந்தும் தொழில் செய்து வருகின்ற ஒரே பகுதியினர் எங்களுடைய தொழிலார்கள் மாத்திரமே.ஆனால் அவர்களுடைய விடயம் தொடர்பாக தொழில் ஆணையாளர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.
தொழிலாளர்கள் அமைதியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள். அவர்கள் தங்களுடைய மௌனத்தை கலைத்தால் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.
பெருந்தோட்ட தொழிலார்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இரங்கினால் அது அரசாங்கத்தின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக பாதிக்கும்.எனவே இது தொடர்பாக தொழில் ஆiணாயளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கத்தின் வருமானம் கிடைக்கின்ற அனைத்து துறைகளும் பாரிய நட்டத்தையே இந்த கொரோனா காரணமாக அடைந்துள்ளது. ஆனால் இன்று வரை நட்டமில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரே துறை பெருந்தோட்ட துறை மாத்திரமே. எனவே இந்த துறையை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
