தெற்காசியாவில் இந்தியாவின் வளர்ச்சி என்பது உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில், ஏனைய தெற்காசிய நாடுகளுக்கும் பயன்பெறுவதற்கான ஏராளமான வாய்ப்புக்கள் இருக்கின்றன. குறிப்பாக இலங்கையைக்கு இந்த வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இலங்கை அபிவிருத்தியடைய வேண்டுமாயின், முதலில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று தற்போதைய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் மட்டுமே இந்தியாவையின் வளர்ச்சியில் இலங்கையும் பலனடையும் வாய்ப்புக்களைப் பெறும். பிரச்சினைக்கான தீர்வுதான் என்ன என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
பூகோள அரசியலில் மதிநுட்பமான இராஜதந்திரமே பலமானதொரு ஆயுதம். அந்த ஆயுதத்தை முறையாக கையாள்வதென்பதுகூட ஒரு வகையான கலைதான். இலங்கை விவகாரத்தில் இந்த இராஜதந்திர ஆயுதத்தை முறையாக பயன்படுத்துவது டில்லிக்கு கைவந்த கலையாகும். இதனால் இரு தரப்புகளும் வெற்றிகண்டுள்ளன. அதன் அனுகூலங்களை இன்றளவிலும் அறுவடை செய்துவருகின்றன. இதில் ஒன்றுதான் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம்.
இலங்கை அரசமைப்பில் இது ஒரு அங்கமாக இருந்தாலும் இரு நாடுகளுக்கிடையிலான சர்வதேச உடன்படிக்கையாகும் என்பது கவனிக்கத்தக்கது.
இலங்கையில் தமிழர்களின் அறவழிப்போராட்டம் காலப்போக்கில் ஆயுதபோராட்டமாக மாறியது. இலங்கைபோன்றதொரு நாட்டில் ஆயுதப் போராட்டம் இடம்பெறுவது பிராந்தியத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உள்ளிட்ட முக்கிய காரணங்களைக் கருத்திற்கொண்டு, துப்பாக்கி வேட்டுகளுக்கு முடிவுகட்டி, பேச்சுமூலம் தீர்வை எட்ட இந்தியா தலையிட்டது. இணைந்த வடக்கு, கிழக்கில் கௌரவமானதொரு அரசியல் தீர்வைகாணும் நோக்கில் ‘அதிகாரப்பகிர்வு’ கோட்பாடு சகிதம் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு தென்னிலங்கையிலும், புலிகள் தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தபோதிலும் 1987 ஆம் ஆண்டு ஜுலை 29 ஆம் திகதி இது குறித்து இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவும், இந்தியாவின் சார்பில் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியும் கையெழுத்திட்டனர். இந்த தீர்வு 13 ஆவது திருத்தச்சட்டமாக அரசமைப்புக்குள் உள்வாங்கப்பட்டது.
13 ஆவது திருத்தச்சட்டம் இலங்கையில் முழுமையாக ஏற்கப்பட்டிருக்குமானால் ஆயுதப்போரால் ஏற்பட்ட அழிவுகள் இடம்பெற்றிருக்காது என்பதை பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் பெரும்பான்மையின சிங்கள, பௌத்த மக்களின் ஆதரவின்றி அமுலாகும் தீர்வுகள் நிலைப்பதில்லை. இதனால்தான் இராஜதந்திர நுட்பத்துடன் வடக்க, கிழக்கு, தெற்கு, மலையகம் என எல்லா இடங்களிலும் மாகாண ஆட்சி முறைமையை இந்தியா அறிமுகப்படுத்தியது. அதனால்தான் இன்றளவிலும் அந்த முறைமை நீடித்துள்ளது. தமிழர் தரப்பும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஒரு சிறந்த தீர்வு பொதியாக கருதுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் அதனை அடைவதற்கான ஏதுவான சூழ்நிலைகளும் உள்ளன. இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் ‘13’ ஐ ஏற்றிருப்பது இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
நிர்வாணமாக நிற்கும் ஒருவனுக்கு கோவணம் வழங்கும்போது அதனை வாங்கி மானத்தை காத்து, முன்னோக்கி செல்வதை விடுத்து ‘கோட்சூட்’ கேட்டு அடம்பிடிப்பது ஏற்புடைய விடயமாக அமையாது. இந்த தீர்வு விடயத்திலும் அப்படிதான், சமஷ்டி, ஒற்றையாட்சி என்றெல்லாம் கூவிக்கொண்டிருப்பதைவிட, இருப்பதை தக்கவைத்து, இரண்டாம் கட்டம் நோக்கி நகர்வதே சிறப்பு. தீர்வு விடயத்தில் அடுத்தக்கட்டம் நோக்கி செல்வதற்கான ஒரு உந்து சக்தியாக ‘13’ இருப்பதுதான் இந்தியா அன்று வைத்த இராஜதந்திர பொறிமுறையின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது.
இராஜதந்திர நகர்வுகளின்போது அழுத்தங்களை பிரயோகிப்பதைவிட, பிரச்சினையின் ஆழத்தை புரியவைத்து விடயங்களை சாதித்துக்கொள்வதுதான் வெற்றியின் இரகசியம். ஜெனிவா உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களின்போது இலங்கைக்கு இந்தியா அழுத்தங்களை பிரயோகிப்பதில்லை. மாறாக 13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறே வலியுறுத்தும். அதனால்தான் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவான பின்னர், 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதற்கான பேச்சுகளை மீள ஆரம்பித்துள்ளார். தமிழர் தரப்பும் டில்லிமீது நம்பிக்கை வைத்து சென்றுள்ளது. இவ்வாறு இரு தரப்புகளின் நம்பிக்கையை வென்றதும் இந்தியா கண்ட வெற்றியாகும்.
இந்தியாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ‘13’ ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் மாறாக அணுகுமுறையை பின்பற்றுகின்றமையும் பிராந்தியத்தில் இந்தியாவின் பலத்தை காட்டுகின்றது. 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதே இந்தியாவின் எதிர்பார்ப்பு.
13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு மாகாணங்களை சுயாதீனமாக இயங்குவதற்கு இலங்கை அனுமதித்தால், நாட்டை அது அடுத்தக்கட்டம் நோக்கி நிச்சயம் அழைத்துச்செல்லும். இலங்கையை 2048 இல் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீவிரமாக செயற்பட்டு கொண்டிருக்கின்றார். அதற்கான பொருளாதார மறுசீரமைப்புகளையும் செய்துவருகின்றார். ஆக 13 ஐ முழுமையாக அமுல்படுத்தி அரசமைப்பு மறுசீரமைப்பையும் செய்தால் மட்டுமே பாரிய சவால்களின்றி அந்த இலக்கை, இலங்கையால் அடைய முடியும். தீர்வு விடயத்தில் இந்தியா காட்டியுள்ள வழியில் இலங்கை பயணித்தால் இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் அதேவேளை, அமைதி பூங்காவாகவும் மாறும்.