கிளிநொச்சி – இரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கின்றவர்களின் சடலங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் இன்று அறிவித்தது.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள ரவூப் ஹக்கீம், “கிளிநொச்சி – இரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும்.
இந்த விடயத்தில் ஏற்கனவே அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியானது என நிரூபிப்பதற்கான முயற்சியாகவே இது அமைகிறது” என பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், “ஒரே கல்லில் இரண்டுக்கு மேற்பட்ட மாங்காய்களை அடிக்கவே, இரணைதீவை தெரிவு செய்துள்ளார்கள். தமிழ் பேசும் மக்கள் நிதானமாக இதை அணுக வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.










