இலங்கையின் பொறுப்புக்கூறலை   அர்த்தமுள்ளதாக்குக!

“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, பொறுப்புக்கூறல் தொடர்பான குற்றவியல் பொறுப்புத் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதத்தில் அடுத்த தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானங்களைப் பிரேரிக்கும் மையக் குழு நாடுகளிடம் இந்தத் தரமுயர்த்தலை நாம் வேண்டி நிற்கின்றோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும்  கனேடிய வெளிவிகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி அமைச்சர் வெல்டன் எப் உள்ளிட்ட கனேடிய அரசியல் தரப்பினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று கனடா – ஒட்டாவாவில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கனேடிய பிரதி அமைச்சரிடம் எழுத்து மூல கோரிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தக் கோரிக்கைக் கடிதத்தின் முழு வடிவம்  வருமாறு,

“ஈழத்தமிழர் மீது திட்டமிடப்பட்ட தொடர்தேர்ச்சியான இன அழிப்பு இலங்கைத் தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றக் குழுத் தலைவராக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி 1956 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய திருகோணமலைப் பிரகடனத்தில் எவ்வாறு இந்தத் திட்டமிடப்பட்ட இன அழிப்பை இலங்கை அரசு கட்டமைப்பு ரீதியாக மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதென்பதை ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான மறைந்த தந்தை செல்வா ஆரம்பத்திலேயே தெளிவாக விளக்கியிருந்தார். அதன் ஒரு வடிவமாகவே ஒற்றையாட்சி அரசமைப்பு தொழிற்படுகின்றது என்று சர்வதேச தரப்புகளை நோக்கி இலங்கை எதிர்நோக்கும் சிக்கல் என்ற வெளியீட்டை முதல் முதலாக சர்வதேசம் நோக்கி தமிழரசுக் கட்சி முன்வைத்திருந்தது. இது தொடர்பில் அன்று தொட்டு இன்று வரை சர்வதேசத்தின் பங்கை மக்கள் பிரதிநிதிகளாக நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

மேற்குறித்தபடி, 1956 ஆம் ஆண்டில் இந்தத் திட்டமிட்ட இன அழிப்பு என்பதைத் தெளிவாக அடையாளப்படுத்த முன்னரே தீவில் இன ரீதியான ஒடுக்குமுறை ஆரம்பித்திருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்ட 1948 இல் இருந்தே தமிழர்களின்  குடிப்பரம்பலை அவர்களின் வரலாற்று, மரபுவழித் தாயகத்தில் மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்தல் என்பதும் மலையகத் தமிழர்களின் குடியுரிமைப் பறிப்பு உள்ளிட்ட, இதர அடக்குமுறைகளும் ஆரம்பித்துவிட்டிருந்தன.

திட்டமிட்ட இன அழிப்பின் போக்கில் இறுதியாக, பெரும் சரீர இன அழிப்புப் போரை எமது மக்கள் 2009 ஆம் ஆண்டில் எதிர்கொண்டு அழிவுக்குள்ளான பேரவலம் நடைபெற்றது. ஆயுதப் போராட்டத்துக்கு முன்பதான நீண்டதொரு அமைதிவழிப் போராட்டத்தின்போது தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான கூட்டாட்சிக் கோரிக்கை பல முறை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

நேரடிப் பேச்சுகளில் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக இணங்கிய உடன்படிக்கைகளையும் இலங்கையின் ஆட்சியாளர்கள் ஒருதலைப்பட்சமாக மீறி, மேலும் பேரினவாதமாகக் கெட்டியாக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசமைப்புகளை தமிழ் மக்களின் பங்கேற்பின்றி உருவாக்கினர்.

அமைதிப் போராட்டம் வன்முறையாலும் இனக் கொலைத் தாக்குதல்களாலும் அடக்கி ஒடுக்கப்பட்டது. அமைதி வழிமுறைகள் அனைத்தும் முயற்சிக்கப்பட்டு பலனிளிக்காதவிடத்து சர்வதேச சட்டம் அளிக்கும் இறுதி வழியான கிளர்ச்சி செய்யும் உரிமையின் பாற்பட்டும், பிரபலமான 1977 வட்டுக்கோட்டைத் தீர்மானம் வழங்கிய மக்கள் ஆணையின் பாற்பட்டும், ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது. அதன்போது ஏற்பட்ட பல்வேறு சமாதான முயற்சிகளும் தென்னிலங்கைத் தரப்புகளின் இனவாதப் போக்கினால் முடக்கப்பட்டன. இடையில் கொண்டுவரப்பட்ட அதிகாரப் பரவலாக்க அரசமைப்பு ஒழுங்குகளையும் முழுமையாக அமுலாக்காமல் ஒற்றையாட்சி முறை தடுத்து வருகின்றது. இவையெல்லாம் தங்களுக்கும் தெரிந்த வரலாறாக இருப்பினும் எனது கோரிக்கைகளின் சூழமைவை எடுத்தியம்புவதற்காக இங்கு இவற்றைச் சுருக்கமாகக் குறிப்பிட்டேன்.

இந்த அடிப்படையில், இலங்கைத் தீவு தொடர்பான பொறுப்புக்கூறல் அர்த்தமுள்ளதாகுவதெனில் அதைப் பின்வரும் மூன்று விதமாகப் படிநிலைப்படுத்தப்பட்ட முக்கியத்துவத்தோடும் ஒழுங்கோடும் அணுக வேண்டும் என்பது எமது பார்வையாக உள்ளது.

1) தலையாய சர்வதேசக் குற்றமான இன அழிப்புத் தொடர்பான பொறுப்புக்கூறல்
2) இதர சர்வதேசக் குற்றங்களான போர்க்குற்றங்கள், மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை, வலிந்து காணமலாக்கப்பட்டமை ஆகியவை பற்றிய பொறுப்புக்கூறல்
3) மேற்குறித்த குற்றங்கள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் பல பத்தாண்டுகளாகத் தீர்க்கப்படாது புரையோடிப்போயிருக்கும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை, குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கூட்டாட்சி அரசமைப்பொன்றை ஏற்படுத்துவதும் பொறுப்புக்கூறலின் முக்கிய பெறுபேறாக அமையவேண்டும்.

மேற்குறித்த மூன்று முனைகளில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதிலும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதிலும் பெருந்தொகையாகப் புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் முதன்மையான நாடான கனடா நாடானது பின்வரும் வழிகளில் காத்திரமாக உதவ வேண்டும் என்று அனைத்து ஈழத்தமிழர் மற்றும் தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும் வேண்டி நிற்கின்றேன்.

ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அண்மைய அறிக்கையிள்  பிரேரித்திருப்பவையும் இங்கு நான் முன்வைக்கும் கோரிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் உசாத்துணையாக அமைந்துள்ளன என்பதையும் தங்களுக்கு எடுத்துக் காட்ட விரும்புகின்றேன். இவ்வகையில், அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் தொடர்பாகத் தங்களின் தயவான பார்வைக்கு நான் முன்வைக்கும் கோரிக்கைகள் வருமாறு:-

1. தலையாய பொறுப்புக்கூறலுக்குரிய தமிழ் இன அழிப்புக் குற்றம் தொடர்பான இலங்கையின் அரச பொறுப்பை விசாரணைக்கு உட்படுத்துமாறு உலக நீதிமன்றை அணுகுதல்.

மியான்மார் நாட்டில் றொஹின்யா மக்கள் மீது இன அழிப்பு மேற்கொண்டதில் மியான்மார் அரசுக்குப் பொறுப்பு உள்ளதா என்பதை உலக நீதிமன்று விசாரிக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்வதற்கு கனடா நாடு அனுசரணையாக இருந்துள்ளது பாராட்டத்தக்கது. அதுமட்டுமன்றி, தனது நாட்டிலேயே வாழுகின்ற பூர்வகுடிகள் மீது முற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களையும் இன அழிப்பு என்று ஏற்றுக்கொண்டு அதற்குப் பரிகார நீதியை வழங்க கனடா நாடு முற்படுகின்றமை முன்மாதிரியானது.

கனேடிய ஈழத்தமிழர்கள் தமக்குரிய இரண்டாம் தாயகமாக வரித்துக்கொண்டுள்ள தங்கள் அரசிடம், தமது தாயகத்தில் பாதிக்கப்பட்ட தரப்பாக, அந்தப் பாதிப்போடு கனடாவிலும் தமது வாழ்க்கையைத் தொடர்கின்றவர்களாக, தாயகத்தில் ஈழத்தமிழர் மீதான இன அழிப்புத் தொடர்பான இலங்கை அரசின் பொறுப்பை உலக நீதிமன்றில் விசாரிக்க உதவுமாறு வேண்டி நிற்கின்றார்கள். இது தொடர்பாக கனடிய நாடாளுமன்றில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு மனுக்களையும் முழுமையாகக் கருத்தில் எடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை உலக நீதிமன்றம் நோக்கி முன்னெடுக்க ஆவன செய்யுமாறு கனேடிய அரசை, குறிப்பாக வெளிநாட்டமைச்சை வேண்டுகின்றேன்.

இது தொடர்பாக கனடாவில் வாழும் ஈழத்தமிழர்களின் பலதரப்பட்ட அமைப்புகளும் அடிமட்ட செயற்பாட்டாளர்களும் செயற்பட்டுவந்துள்ளார்கள் என்பதோடு, இவை பற்றி தொடர்ச்சியாக தாயகத்திலிருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அறியத்தந்து கொண்டிருக்கின்றார்கள்.

2. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கையாளப்படும் இதர குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் உயர் கட்டத் தரமுயர்த்தலை எதிர்வரும் 60 ஆம் கூட்டத் தொடரோடு மேற்கொள்ளுதல்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் தொடர்பான இறுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் 51/1 (06 ஒக்டோபர் 2022) மேலும் நீடிக்கப்பட்டு, அதன் அடுத்த கட்டமாக 58 ஆம் அமர்வில் (பெப்ரவரி – ஏப்ரல் 2025) வாய்மூல அறிக்கையிடலையும், 60 ஆம் அமர்வில் (செப்டெம்பர் – ஒக்ரோபர் 2025) எழுத்துமூல அறிக்கையிடலையும் மேற்கொள்ளுமாறு மனித உரிமை உயர் ஆணையாளரையும் பேரவைப் பொறிமுறையையும் பணித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தீர்மானங்களும், அவை தொடர்பான நடவடிக்கைகளும், அறிக்கையிடல்களும் இலங்கைத் தீவில் இடம்பெற்ற சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளபோதிலும், இலங்கை மீது தொடர்ச்சியாக அழுத்தங்களை மேற்கொண்டு வந்துள்ள போதிலும், பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கையில் மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறி வரும் அரச தரப்பினர் அவ்வப்போது வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை மீளப்பெற்றுள்ள அரசியல் விருப்பற்ற கண்துடைப்பு நடவடிக்கைகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

விளைவாக, காலநீடிப்பும் அரசியல் வெளியும் இலங்கை அரசுக்கு தொடர்ந்து வழங்கப்படுவதே நடைபெற்றுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் விசனமடைந்துள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக உருவாக்கப்பட்ட அலுவலகப் பொறிமுறையிலும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள். ஆகவே, இனியும் இலங்கை அரசுக்குக் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, பொறுப்புக்கூறல் தொடர்பான குற்றவியல் பொறுப்புத் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதத்தில் அடுத்த தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானங்களைப் பிரேரிக்கும் மையக் குழு நாடுகளிடம் இந்தத் தரமுயர்த்தலை நாம் வேண்டி நிற்கின்றோம்.

நீண்ட காலமான இழுத்தடிப்பானது காலங்கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி என்றாகிவிடும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. உலகில் ஏற்படும் ஸ்திரமின்மையும் உலக ஒழுங்கு மாற்றங்களும் மேலும் நீர்த்துப்போகச் செய்யும் சூழலை ஏற்படுத்திவிடுமோ என்று எமது மக்கள் அஞ்சுகின்றார்கள். ஆதலால், இலங்கை தொடர்பான தீர்மானத்தை இனிமேலும் இரண்டாம் நிகழ்ச்சி நிரலுக்குள் கையாளுவதற்குப் பதிலாக, தரமுயர்த்தப்பட்ட நான்காம் நிகழ்ச்சி நிரலுக்குள் கையாளுவது மேலும் பொருத்தமாக இருக்கும் என்பது எமது அபிப்பிராயம்.

அதேவேளை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள சாட்சியங்களைச் சேகரித்துப் பேணும் பொறிமுறையை ஒரு முழுமையான ‘சர்வதேச பக்கச்சார்பாற்ற சுயாதீனப் பொறிமுறையாகத் தரமுயர்த்துவது மேலும் சிறப்பாக அமையும்.

போர்க்குற்றங்கள், மனிதத்துவத்துக்கெதிரான குற்றங்கள் போன்றவற்றுக்கும் மேற்சென்று இன அழிப்புக் குற்றங்கள் தொடர்பான குறிப்பான நோக்கு, தாக்குதல்கள் தொடர்பான சாட்சிகளையும் சாட்சியப் பொறிமுறை உள்ளடக்கும் வகையில் அது தரமுயர்த்தப்பட்டால் மேலே குறிப்பிடப்பட்ட முதலாம் கோரிக்கைக்குத் தேவையான சாட்சிகளைத் திரட்டுவதற்கும் அது பெரும் உதவியாக அமையும். இது குறித்த ஆய்வெல்லையைத் தரும் வகையில் அடுத்த தீர்மானம் அமையவேண்டும் அல்லது அதற்கேற்ற உண்மைகளைக் கண்டறியும் ஆணையத்தை நியமிக்க வேண்டும்.

அதேவேளை, ஐ.நா. பாதுகாப்புச் சபையும், பொதுச்சபையும், பொதுச் செயலாளரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல், சர்வதேச விசாரணை குறித்து தீர்க்கமான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பரிந்துரைக்க வேண்டும் என்றும் எமது மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் தனது நட்பு நாடுகளின் ஊடாக கனடா இதற்கு ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எனது மக்கள் சார்பாக வேண்டிக்கொள்கின்றேன்.

3. புதிய அரசமைப்பு காத்திரமாக மேற்கொள்ளப்படுவதற்குரிய புதுமையான சர்வதேச மத்தியஸ்துவத்தை ஏற்படுத்த ஆவன செய்தல்.

புதிய அரசமைப்பு ஒன்றின் ஊடாக இனப் பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் பெரும்பாலும் ஒத்துக்கொண்டிருந்தாலும், அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படுகின்றபோது, அது மீண்டும் இறுக்கமான ஒற்றையாட்சித் தன்மை கொண்ட ஒன்றாக அமைந்துவிடும் ஆபத்து உள்ளது என்ற அச்சம் பரவலாகத் தமிழ் மக்களிடையே வேரூன்றியுள்ளது. கடந்த கால அனுபவத்தோடு நோக்குகையில் இது நியாயமான அச்சமே.

இவ்வாறான சிக்கலுக்கு மீண்டும் மீண்டும் நாம் ஆளாகாது இருக்கவேண்டுமாயின் தீவிலுள்ள தத்தமக்கான இறைமைக்கும் முழுமையான சுயநிர்ணய உரிமைக்கும் பரிகார நீதிக்கும் உரித்துடைய தேசங்களுக்கும் ஏனைய மக்களுக்கும் இடையே கூட்டு உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசமைப்புக்கு முன்னரான சமூக ஒப்பந்தம் ஒன்று சர்வதேச மத்தியஸ்தத்தோடு மேற்கொள்ளப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அரசமைப்பு உருவாக்கப்படுவதே பொருத்தமாக இருக்கும்.

இது தொடர்பில் கனடா முன்னுதாரணமான ஆட்சிமுறையைக் கொண்ட ஒரு நாடாக விளங்குகிறது. கியூபெக் மாகாணத்தின் ஒரு தலைப்பட்சமாகப் பிரிந்து செல்லும் உரிமை தொடர்பாக 1998 ஆம் ஆண்டு கனடிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகிய பின்னர் தெளிவுபடுத்தற் சட்டம் என்பதை 2000 ஆம் ஆண்டில் கொண்டுவந்து கூட்டாட்சி அலகுகளான மாகாணங்களுக்கான சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட பொதுவாக்கெடுப்பை எவ்வாறு நடாத்தவது என்பதைத் தெளிவுபடுத்திய அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. இந்தவகையில் கனடா நாட்டின் கூட்டாட்சி முறை எமக்கு நம்பிக்கை தரும் ஒரு முன்னுதாரணம் ஆகும். இதைப் போன்ற ஒரு தீர்வை இலங்கைத் தீவிலும் ஏற்படுத்தும் வகையில் ஊக்கமூட்டும் சர்வதேச ஒழுங்குகளைக் கனடிய அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் பணிவோடு வேண்டுகின்றேன்.

நல்லிணக்க நடவடிக்கைகளையும் பொருளாதார ரீதியான முன்னெடுப்புகளையும் ஒன்றோடு ஒன்று இணைந்ததாகப் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தமது பூர்வீகத் தாயகத்தோடு மேற்கொள்வதற்கு ஏதுவாக மேற்குறித்த பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு ஆகியன இன்றியமையாத முதற்கட்ட நடவடிக்கைகள் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன். அவர்களின் மகிழ்வான உள நலத்துக்கும் இது நன்மை பயக்கும். பொறுப்புக்கூறலும் அநீதிகள் மீளநிகழாமையும் உறுதிப்படுத்தப்பட்டாலே உரிமையோடு அடுத்த கட்ட பொருளாதார நல்லிணக்க நகர்வுகள் ஆரோக்கியமாக இடம்பெறும் சூழல் எமது தீவில் உருவாகும் என்பதையும் தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன். தங்களைச் சந்தித்து இந்தக் கோரிக்கைகளைக் கையளிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்தமைக்கு கனடிய வெளிவிவகார அமைச்சுக்கு மன நிறைவோடு எனது மனமார்ந்த நன்றிகள்.” – என்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles