இலங்கையை பந்தாடியது ஆஸி! இரண்டாவது போட்டி இன்று

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.

சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ரி-20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 38 ஓட்டங்களையும், பெத்தும் நிசங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தனுஷ்க குணதிலக 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுக்களையும் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 13.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதற்கமைய, மூன்று போட்டிகள் கொட்ட ரி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது ரி20 போட்டி இன்று புதன் கிழமை தினம் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles