இலங்கை – இந்திய தரைவழி தொடர்பும் கொழும்பு அடையும் நன்மைகளும்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு முதன் முதலில் பயணம் மேற்கொண்டபோது, இலங்கை நாடாளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தார். மகாகவி பாரதியின் கவி வரியொன்றை மேற்கோள்காட்டியே அவர் தமது உரையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

“சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்” என்பதே அந்த வரியாகும்.

சுமார் 3 சதாப்தங்களுக்கு பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட முதல் சந்தர்ப்பம் அதுவாகும். குறிப்பாக இலங்கையில் அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற நாடாளுமன்றத்திலேயே மோடி இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த கூற்று அக்காலப்பகுதியில் பெரிய அளவில் பேசப்படாதபோதிலும் தூர நோக்கு சிந்தனையின் அடிப்படையிலேயே பிரதமர் மோடி இவ்விடயத்தை குறிப்பிட்டிருக்ககூடும் என்பது தற்போது தெளிவாகின்றது.

ஆம், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நில ரீதியிலான தொடர்பு தொடர்பில் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது பாரத பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பில் தரைவழி இணைப்புக்கான சாத்தியப்பாடுகள் பற்றி ஆராய்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் தரைவழி தொடர்பு இருந்தது எனவும், ராமர் பாலம் ஊடாகவே அது அமைக்கப்பட்டது எனவும் வரலாற்று ரீதியிலான தரவுகள் தெரிவிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தமிழகம் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் சுமார் 30 கிலோ மீற்றருக்கு இடைப்பட்ட தூரமே இருக்கும்.

தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே 13 மணல் தீடைகள் உள்ளன தனுஷ்கோடியிலிருந்து முதல் 6 ஆறு மணல் தீடைகள் இந்தியாவுக்கும், 7-லிருந்து 13-வது தீடை வரை இலங்கைக்கும் சொந்தமானவை. ஒவ்வொரு மணல் தீடையும் குறைந்தது 1 கி.மீ தூரம் கொண்டது. மேலும் இந்த கடற்பகுதி ஆழம் குறைவானதும் கூட.
எனவே, பாலம் அமைப்பதில் பாரிய சவால்கள் ஏற்படாது என சுட்டிக்காட்டப்படுகின்றது.

குறித்த பாலம் கடலுக்கு மேலாகவும், மணல் தீடைகளிலும் அமையலாம். குறிப்பாக பிரிட்டனின் போல்ஸ்டோன் நகரில் இருந்து பிரான்சின் கிளாசிஸ் நகருக்கு கடலுக்கு அடியில் சுமார் 50 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைத்து சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இடம்பெற்றுவருவதுபோல் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே கடலடியில் சுரங்கப்பாதை அமைக்கவும் முடியும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த பாலம் அமைக்கும் திட்டம் நிறைவேறிய பின்னர் அது இலங்கையின் வளர்ச்சிக்கு பக்கபலமாக அமையும் என்பது உறுதி. இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் பல நூற்றாண்டுகாலமாக சிறந்த உறவு நீடித்து வருகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் , கப்பல் போக்குவரத்து ஊடாகவே அதிகம் இடம்பெறுகின்றது. பாலம் அமைந்தால் நேர விரயம் குறையும் என்பதுடன், அதிக செலவையும் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். அதன்மூலம் விலைகுறைப்பு உள்ளிட்ட விடயங்களை செய்து சந்தை வாய்பை விரிவுபடுத்திக்கொள்வதற்கு இரு நாடுகளுக்கும் பக்கபலமாக இருக்கும். அதேபோல இதர தெற்காசிய நாடுகளுக்கும் இந்தியா ஊடாக இலங்கை தரைவழி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய சாத்தியமும் உருவாகும்.

இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து பிரிதொரு மாநிலத்துக்கு செல்லும் தூரத்தை எடுத்துக்கொண்டால், தமிழகத்தில் உள்ள பலர் சுற்றுலாவுக்காக இலங்கை வருவதற்கான வழியையும் இது திறந்துவிடும். அதேபோல ஆன்மீக சுற்றுலாத்துறையும் மேம்படும். அதன்மூலம் இலங்கைக்கு அந்நிய செலாவணி இருப்பை அதிகரித்துக்கொள்ளலாம். தற்போது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியர்களாவர்.

அதேவேளை, இந்தியாவிலிருந்து நேரடியாக எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கையை அனுமதிக்கும் பெற்றோலியக் குழாய் நிர்மாணம் பற்றியும் பேசப்பட்டுள்ளது. பாலம் அமைந்தால் இதனை பாதுகாப்பான போக்குவரத்து பொறிமுறை ஊடாக செய்யலாம். இந்தியா பொருளாதார ரீதியில் பலம்பொருந்திய நாடு. உலக சந்தையில் இருந்து பல மாதங்களுக்கு தேவையான எரிபொருளை வாங்கி சேமித்து வைக்கும். எனவே, உலக சந்தையில் விலை தளர்வு ஏற்பட்டால்கூட, மாறா விலையில் எரிபொருளை விநியோகிக்ககூடிய வாய்ப்பு இலங்கைக்கு கிட்டும். எரிபொருளுக்காக அரசு நாடுகளையே முழுமையாக நம்பியிருக்க வேண்டிய தேவையும் எழாது.

அதேபோல் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களுக்கும் இந்த தரைவழி போக்குவரத்துக்கு ஏதேனுமொரு வழியில் உதவியாக அமையும். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்பும் விரிவுபடும்.

இலங்கையில் எல்லா விடயங்களையும் குறுகிய அரசியலாக பார்ப்பவர்கள் இத்திட்டத்தையும் எதிர்க்ககூடும், பாலம் அமைந்தால் பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவலாம், இந்திய படைகள் இலங்கை வரலாம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழகத்துடன் இணையும் என்றெல்லாம்கூட பிரச்சாரங்கள் செய்யக்கூடும். இந்த மாய வலைக்குள் சிக்காமல், மக்கள் யதார்த்தத்தை உணர வேண்டும்.

இந்தியா சுதந்திரமடைந்து 100 வருடங்கள் ஆகம் 2047 ஆம் ஆண்டளவில் உலகில் முதலாவது பொருளாதார சக்தியாக உருவெடுப்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கான திட்டங்களும் செயற்படுத்தப்பட்டுவருகின்றன. தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியா இன்னும் 5 ஆண்டுகளுக்குள் பொருளாதார வளர்ச்சியில் மூன்றாவது இடத்துக்கு முன்னேற முயற்சித்துவருகின்றது.

இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசும், 2048 ஐ இலக்கு வைத்து தேசிய வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளன. இத்திட்டம் வெற்றியளிக்க வேண்டுமெனில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவது தவிர்க்க முடியாத விடயமாகும். இந்தியாவின் அண்டை நாடாக இருப்பதுகூட இலங்கைக்கு ஒரு பலம்தான் எனக் கூற வேண்டும்.

Related Articles

Latest Articles