உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியே இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கியதாக நிதியமைச்சர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதே காலப்பகுதியில் எரிபொருளுக்கு செலுத்துவதற்காக இலங்கையும் கறுப்புச் சந்தை டொலர்களைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் எரிபொருள் இறக்குமதிக்கு பணம் செலுத்துவதற்கு டொலர்கள் தேவைப்பட்டதாக தெரிவித்த நிதியமைச்சர், தாம் ஏனைய அதிகாரிகளுடன் கொழும்பில் உள்ள ‘புறக்கோட்டை’ வர்த்தகப் பகுதிக்கு விஜயம் செய்ததாகவும், அங்கு கறுப்புச் சந்தையில் டொலர்களைப் பாதுகாப்பதற்காக வர்த்தகர்களுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு குறைந்து வரும் இவ்வேளையில், நாட்டுக்கு மிகவும் தேவையான டொலர்களை கொண்டு வருவதற்கு கறுப்புச் சந்தை முறையைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வங்கித் துறைக்கு வெளியே மக்கள் தங்கள் டாலர்களை மாற்றுவதன் மூலம் அதிகப் பணத்தைப் பெறுவதில் தவறில்லை எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.










