“காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இது தேசத்துரோக நடவடிக்கையாகும்.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் விமல்வீரவன்ச மேலும் கூறியவை வருமாறு,
“ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதியும் அங்கு செல்கின்றார்.
இலங்கையிலுள்ள கனிம வளங்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காகவே இவர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராக அன்று போராடிய ஜே.வி.பியினர் இன்று அடிக்கடி இந்தியா விரைந்து செல்கின்றனர். இங்குள்ள கனிம வளங்களை இந்தியாவுக்கு வழங்குகின்றனர்.
இந்தியாவுடன் திருட்டுதனமாக ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அவற்றுள் என்ன உள்ளது என்பது எவருக்கும் தெரியாது.
அதேவேளை, காங்கேசன்துறை துறைமுகத்தையும் விரைவில் இந்திய மயப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்குரிய திட்டம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தை எடுத்து 10 ஆண்டுகளுக்கு தமது நிர்வாகத்தை முன்னெடுக்க இந்திய தரப்பு திட்டமிட்டுள்ளது. அதன்பின்னரும் அது அவர்கள் வசமே இருக்ககூடும்.
அடுத்து திருகோணமலை துறைமுகமும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்தியாவுக்கு ஏற்கனவே எண்ணெய் குதங்கள் உள்ளன.
மிக முக்கிய மர்மஸ்தானம்தான் திருகோணமலை துறைமுகம். அதனையும் இந்தியாவுக்கு வழங்க முயற்சிக்கப்படுகின்றது.
எமது நாட்டு வளங்களை இந்திய மயப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.” – என்றார் விமல் வீரவன்ச.










