” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என அரசாங்கத்தாலும் , அரச சார்ப்பு தொழிற்சங்கங்களாலும் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் சம்பள உயர்வுக்கு சாத்தியமில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளதுடன், இது விடயத்தில் இழுபறி நிலை தொடர்கின்றது. ” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனவரி முதலாம் திகதி முதல் சம்பள உயர்வு கிடைக்கவேண்டுமெனில் இந்நேரம் பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தீர்மானம் எட்டப்பட்டிருக்கவேண்டும்.ஆனால் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் திட்டமிட்ட அடிப்படையில் பிற்போடப்பட்டுவருகின்றது.
ஜனவரி 7 ஆம் திகதிதான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிப்பு விடுக்கப்பட்டாலும் எப்போது இறுதி முடிவு எட்டப்படும் என்பது பற்றி உறுதியான தகவல் எதுவும் இல்லை. சிலவேளை இதன் பின்னணியில் இழுத்தடிப்பு என்ற நாடகம்கூட அரங்கேறலாம். பேச்சுவார்த்தை நடக்கின்றது என்ற போர்வையில் காலம் கடத்தப்படலாம்.
குறிப்பாக வரவு – செலவுத் திட்டத்தில் ஆயிரம் ரூபா தொடர்பான முன்மொழிவு இருந்தாலும் அதற்கான நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. கம்பனிகள் நினைத்தால் மட்டுமே சம்பளம் கிடைக்கும் என்ற நிலைமை காணப்படுகின்றது. பேரம் பேசி, தீர்வை பெறுவதற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உரிய அக்கறை செலுத்தவில்லை.
எது எப்படியிருந்தாலும் எமது மக்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம், ஜனவரியில் தீர்வு எட்டப்படாவிட்டால்கூட, ஜனவரி முதலாம் திகதி முதல் சம்பளம் கணிக்கப்பட்டு நிலுவைக் கொடுப்பனவுகளும் வழங்கப்படவேண்டும்.” – என்றார் திகாம்பரம்.
