கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொமர்ஷல் பகுதியை மையமாகக் கொண்டு தரம் ஐந்து வரை கல்வி கற்க கூடிய வகையில் ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என கொட்டக்கலை பிரதேச சபை தவிசாளர் இராஜமணி பிரசாந்த் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கோரிக்கை முன்வைத்தார்.
நுவரெலியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இவ்வருடத்திற்கான முதல் அமர்வு நுவரெலியா பிரதேச செயலகத்தில் நேற்று (16) நடைபெற்றது.
நுவரெலியா பிரதேச செயலாளர் விதுர சம்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் குமாரவேல் தொண்டமான் இந்த முதல் அமர்வை தலைமை தாங்கி நடத்தினார்.
இதன் போது பிரதேசவாரியாக அபிவிருத்தி தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய கொட்டக்கலை பிரதேச சபை தவிசாளர் இராஜமணி பிரசாத் மேற்குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.
இதில் அவர் மேலும் தெரிவித்ததாவது.
கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஆகில் தோட்டத்தில் பட்டதாரிகள் காணப்படுகின்ற போதிலும் அத்தோட்ட மாணவர்களுக்கான ஒரு ஆரம்ப பாடசாலை இதுவரை காலமும் அமைக்கப்படவில்லை என பலராலும் பிரதேச சபைக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஆகில் தோட்டம் ஹட்டன் வலயகல்விக்கும் நுவரெலியா வலையக்கல்விக்கும் உரித்துடையதாக காணப்படுகிறது.
இதற்கு முக்கியமான காரணம் ஆகில் தோட்டம் தனியார் தோட்டமாகும் அதேநேரத்தில் இத்தோட்டம் இரண்டு கல்வி வலையங்களுக்கு உரித்தான தோட்டமாகும்.
ஆகையால் நீண்டகாலமாக இத்தோட்டத்தில் ஒரு ஆரம்ப பாடசாலை ஒன்றை அமைக்க சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
என சுட்டிக்காட்டிய தவிசாளர் இத்தோட்டத்தில் ஆரம்ப பிரிவு மாணவர்கள் வெவ்வேறு தூரத்து பாடசாலைகளுக்கு சென்று சிரமத்தை எதிர்கொண்டு கற்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இதே போல ஆகில் தோட்டம் ,கொமர்ஷல் பகுதி ஆகிய மேலும் அருகில் உள்ள தோட்டங்களை உள்ளடக்கிய ஆரம்ப பிரிவு மாணவர்களும் அதே சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.
எனவே கொமர்ஷல் பகுதியை மத்திய பகுதியாக கொண்டு தரம் ஐந்து வரை வகுப்புகள் கொண்ட பாடசாலை ஒன்றை கொமர்ஷல் பகுதியில் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் கொமர்ஷல் பகுதியை மத்திய பகுதியாக கொண்டு ஆரம்ப பாடசாலை ஒன்றை அமைக்க கொட்டக்கலை கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு அருகில் தரிசு இடம் காணப்படுவதாகவும் , அவ்விடத்தை பெற்று அங்கு பாடசாலை அமைக்க முடியுமெனவும் அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதனால் ஆகில் தோட்டம் மற்றும் கொமர்ஷல் பகுதி உள்ளிட்ட அருகில் உள்ள தோட்டங்களை சார்ந்த ஆரம்ப பிரிவு மாணவர்கள் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரை கல்வி கற்க உதவியாக இருப்பதுடன் தரம் ஆறுக்கு கொட்டக்கலை பிரதேச பாடசாலைகளுக்கு செல்ல முடியும் என்பதையும் அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
அதேநேரத்தில் இக் குழு கூட்டத்திற்கு தலைமையேற்றிருந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரமேஸ்வரன் மற்றும் வீ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இக்கோரிக்கையை ஏற்றதுடன் கல்வி வலைய உதவி பணிப்பாளர் எஸ். மோகன்ராஜ் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டதுடன் இதற்கான தீர்வினை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்று தருவதாகவும் தெரிவித்தார்










