“நீலகாமம் பிரகடனம் எதிர்வரும் 05 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டம், காவத்தை, நீலகாமம் தோட்டத்தில் கறுப்பு ஆடை அணிந்த காடையர் கும்பலொன்றால் தற்காலிக குடியிருப்பொன்று அடித்து நொறுக்கப்பட்டது. இச்சம்பவம் ஒட்டுமொத்த மலையகத்தையும் உலுக்கியது.
தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஒடுக்குவதற்காக நிர்வாக தரப்பால் பிரத்தியேக பாதுகாப்பு குழுவொன்று உருவாக்கப்பட்டமை பெருந்தோட்ட மக்களின் இருப்பையும், பாதுகாப்பையும் கேள்விக்குரியாக்கும் வகையில் அமைந்தது.
இந்நிலையில் சமூக செயற்பாட்டு இளைஞர் குழுவின் ஏற்பாட்டில் நீலகாமம் தோட்டத்தில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணசேன் எம்.பி., இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
மேற்படி தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து நீலகாமம் பிரகடனம் முன்மொழியப்பட்டது.
சுயாதீன ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான நிர்ஷன் ராமானுஜம் பிரகடனத்தை வாசித்தார். ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் ரஞ்சன் அருன்பிரசாந்த் உள்ளிட்ட குழுவினர் இப்பிரச்சினையை தேசிய மயப்படுத்துவதில் முன்னின்று செயல்பட்டனர்.
கூட்டத்தின் இறுதியின் பிரகடனத்தை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மக்கள், மனோவிடம் கையளித்தனர்.
மக்கள் மத்தியில் உரையாற்றிய மனோ, 5 ஆம் திகதி அது சபையில் சமர்ப்பிக்கப்படும் என உறுதியளித்தார்.












