குறுக்கு வழி அரசியலுக்காகவே பிரச்சினைகள் தோற்றுவிப்பு

ஒற்றுமையாக வாழ்ந்த இலங்கை மக்கள் 1956 ஆம் ஆண்டிற்குப் பிறகே பிளவுபட ஆரம்பித்தனர் என்றும், குறுக்குவழி அரசியலுக்காகவே வடக்கு – கிழக்கு பிரச்சினை தோற்றுவிக்கப்பட்டது என்றும் கொழும்பு மறைமாவட்டப் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குறுக்குவழி அரசியல் பயணத்தின் மூலம் ஒருபோதும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட்டுப் புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டது. அவ்வாறு ஆட்சி அமையப்பெற்றதற்கு மறுநாள் முதலே, இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட்டுத் தாங்கள் எவ்வாறு ஆட்சிக்கு வருவது என்பது பற்றிய வேலைத்திட்டங்களையே ஏனையோர் ஆரம்பிக்கின்றனர்.

அவ்வாறு செய்யக் கூடாது. ‘மக்கள் தகுந்த ஆணை வழங்கியுள்ளனர்; எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீட்போம்’ என்று அவர்கள் சிந்திப்பதே இல்லை. மாறாக, அடுத்தவர்களின் காலை வாருவது பற்றியே சிந்திக்கின்றனர். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அவர்கள் தேடும் குறுக்கு வழியே இதுவாகும்.

நமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் சில சரியான தேர்வுகளைச் செய்ய வேண்டும். அதில் தியாகமும் இருக்க வேண்டும். நீதியும் சமத்துவமும் அதிர்ஷ்ட லாபச் சீட்டு போல தானாகக் கிடைத்துவிடப் போவதில்லை. அதனைப் பெற்றுக்கொள்வதற்குக் கடினமாக உழைக்க வேண்டும்; சரியான விடயங்களைச் செய்ய வேண்டும். தவறான வழிகளைப் பின்பற்றி ஒருபோதும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

வாழ்க்கையை வெற்றிகொள்வதற்குக் குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது. வாழ்க்கையில் வெல்வதற்கு அர்ப்பணிப்பும் தியாகமும் அவசியம். சரியான கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சமூக மாற்றத்தை ஏற்படுத்தவே முடியாது.

எமது நாட்டில் கடந்த 75 வருடங்களாகப் ஆட்சியாளர்கள் குறுக்கு வழியையே தேடிச் சென்றனர். அந்தப் பதவி ஆசைக்காக எந்தவொரு கீழ்த்தரமான செயலையும் செய்வதற்கு எமது நாட்டுத் தலைவர்கள் துணிந்திருந்தனர். அதற்கு இந்த வடக்கு – கிழக்கு பிரச்சினையே ஒரு சிறந்த உதாரணம்; அது உண்மையில் தேவையற்றதொரு பிரச்சினையாகும்.

இலங்கைக்குச் சுதந்திரம் கிடைக்கும் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மிகுந்த சகோதரத்துவத்துடனேயே வாழ்ந்தனர். அனைவரும் ஒன்றிணைந்தே சுதந்திரத்தைப் பெற்றெடுத்தனர். தேசியக் கட்சிகளையே அமைத்தார்களே தவிர, இனம் அல்லது மதத்தை அடிப்படையாகக் கொண்டு கட்சிகளை அமைக்கவில்லை.

அனைவரும் ஒன்றிணைந்தே நாட்டைக் கட்டியெழுப்பி வந்தனர். ஆனால், 1956 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் அந்த ஒற்றுமை அப்படியே உடைந்தது. சுயநல அரசியலுக்காகக் குறுக்கு வழியைத் தேடப் போய்த்தான் இந்த விபரீதம் ஏற்பட்டது. குறுக்கு வழிகள் மூலம் இந்நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. நாட்டை மீட்பதற்கு உண்மையான அர்ப்பணிப்பு அவசியமாகும்.

எனவே இளைஞர்களே, நீங்கள் இந்தச் சமூகத்தைத் தூய்மைப்படுத்துபவர்களாக மாறுங்கள். ஒருபோதும் உங்களது கொள்கைகளைக் காட்டிக்கொடுக்க வேண்டாம். வாழ்க்கையில் முன்னேறுவதற்குக் குறுக்கு வழிகளைத் தேடாதீர்கள். நேர்வழியில் நின்று, தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுங்கள்” இவ்வாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles