சஜித் வாழ்க என காலையில் கோஷம் எழும்பும் தமிழ் எம்.பி. இரவில் ரணிலுடன் டீல்!

“ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை திரைக்கு முன்னால் விமர்சித்து விட்டு திரைக்குப் பின்னால் பணத்தைப் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை பாராளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர வெளியிட்டு இருக்கின்றார்.

இதில் வியக்க வைக்கும் முகமாக தற்போதைய அரசாங்கத்தையும் ஜனாதிபதியும் விமர்சித்து பிழைப்பு நடத்தும் கண்டி மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் இடம் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.” – என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு,

“ நாடு பொருளாதார சிக்கலில் வீழ்ந்திருந்தபோது இம்மக்களுக்காக இந்த நாட்டை மீட்டெடுக்க ரணில் விக்கிரமசிங்க , பல புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல் எமது வெளிநாட்டு கொள்கைகளை சாணக்கியமாக பயன்படுத்தி சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவிகளைப் பெற்று நாட்டின் பொருளாதார ஸ்தீரதன்மைக்கு பெரும் பங்காற்றி வருகிறார்.

அவரின் இந்த கடினமான பயணத்திற்கு தோள் கொடுக்கும் முகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் நலன் கருதி நாட்டின் பொருளாதாரத்தை முன்னிருத்தி அவருக்கு நேரடியான ஆதரவை வழங்கியது. ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டமூலங்கள் எமது இளைய சமுதாயம் எதிர்பார்த்த பொறுப்பு கூறல் மற்றும் வலுவான கொள்கைகளை உருவாக்குதல் போன்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகின்றது.

இவ்வனைத்து நடவடிக்கைகளையும் விமர்சித்து ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கைகளை மரண சாசனமாக விமர்சித்த கண்டி மாவட்ட தமிழ் எம்.பி., காலையில் சஜித் வாழ்க என்று கோஷம் எழுப்பி விட்டு இரவில் ரணில் விக்கிரமசிங்கவிம் தஞ்சம் புகுந்து பணம் பெற்றுக் கொண்டிருப்பது மிக வேடிக்கையாக உள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் அதன் தலைமையும் விமர்சித்து அரசியல் பிழைப்பு நடத்தும் அவருக்கு நாம் என்றும் வீரமாக முன்னின்று எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மாறாக பின் கதவால் தனது கட்சிக்கு தெரிந்தோ தெரியாமலோ காலையில் ஒரு முகமும் மாலையில் வேறொரு முகம் காட்டும் கோழைத்தனம் எங்களிடம் கிடையாது.

அண்மையில் கண்டியில் புதிய மதுபானசாலைகளை கண்டி மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொண்டுள்ளதாக பௌத்தப்பிக்குகள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.
அது மக்கள் மனதில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்ததுடன் தற்போது ஜனாதிபதியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதும் பௌத்தப்பிக்குகளின் சந்தேகத்திற்கும் ஒற்றுமையுள்ளதாக கருதப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறு கண்டி தமிழ் மக்களை பணயமாக வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் டீல் அரசியல்வாதிகளை மக்கள் இனம் கண்டுள்ளார்கள்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பெற்றுக்கொண்ட பணம் கண்டி மாவட்ட தமிழ் மக்களுடைய சுகாதாரம், கல்வி தொழில் வாய்ப்பை ஏற்படுத்தல் போன்ற செயல் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுமா அல்லது தங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், நாம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு சேவையாற்றக்கூடிய உண்மை தலைவர் என்பதை கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவரிடம் சென்று சரணடைந்ததன் காரணமாக நிரூபித்து விட்டார்.

அவர் வாழ்க என கோஷமிடும் சஜித் பிரேமதாச அவர்களின் கையாலாகாத தன்மையை நிரூபித்து இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களை முன்னிருத்தி நமது மக்களின் அடையாளத்தை பாதுகாக்கவும் அவர்களுடைய வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும் அரசாங்கத்தை உருவாக்குமே தவிர பின் கதவு வழியாக இவர்களைப் போன்று வங்குரோத்த அரசியலில் ஒருபோதும் ஈடுபடாது என்பதை ஆணித்தனமாக தெரிவித்துக் கொள்கிறேன
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் ராமேஷ்வரன் என்ற இ.தொ.காவின் அமைப்பால் மாத்திரமே எமது மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் அபிவிருத்திகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

இவர்களைப் போல எமது மக்களை பயன்படுத்தி சுயலாபத்திற்காக பயணிக்கவில்லை என்பதற்கு பாராளுமன்ற அமர்வு ஒரு சிறந்த சான்று ஆகம்.” – என்றார் பாரத் அருள்சாமி.

Related Articles

Latest Articles