பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் இலங்கை வருகை

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது அலி, 6ஆவது பாகிஸ்தான் – இலங்கை ஆயுதப் படைகள் பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (ஜூலை 01) இலங்கை வந்தடைந்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரையும் அவருடன் வருகை தந்திருந்த பிரதிநிதிக்குழுவினரையும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ஹர்ஷ விதானாராச்சி, மற்றும் இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் வரவேற்றனர்.

6ஆவது பாகிஸ்தான்–இலங்கை ஆயுதப் படைகள் பாதுகாப்புக் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (ஜூலை 03) ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயிலுள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள கடற்படை தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடல், இரு நாடுகளுக்குமிடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், பிராந்திய பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்பு, பயிற்சி மற்றும் நீண்டகாலமாக நிலவி வரும் இலங்கை–பாகிஸ்தான் பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பரஸ்பர அக்கறை கொண்ட விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்வதற்குமான முக்கிய தளமாக அமையும்.

தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது அலி, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

Related Articles

Latest Articles