சமையல் எரிவாயு விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சமையல் எரிவாயு சிலிண்டரின் கலவையில் ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடரும் நிலையில் அது தொடர்பாக தர நிர்ணய நிறுவனங்கள் உறுதிசெய்யவில்லை என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த அவர், அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமையல் எரிவாயு சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டு வெடிக்கும் நிலை நாட்டில் உருவாகி வருகின்றமை தொடர்பில் நேற்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன சபையில் தெளிவுபடுத்தியதையடுத்து ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் களவையின் அளவில் மாற்றம் செய்திருப்பது தொடர்பாக தர நிர்ணய நிறுவனங்கள் உறுதிசெய்யவில்லை என அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
ஆனால் 12.5 சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றில் இருக்கவேண்டியஇரசாயன அளவு தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் முன்னாள் தலைவர் அனில் கொஸ்வத்த, நுகர்வோர் அதிகாரசபையில் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ப்ராடேன் 20வீதமும் பூடென் 80வீதமும் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த கடிதம் கடந்த ஏப்ரல் 24ஆம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபையினால் இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இரசாயன கூறுகள் இரண்டும் 50,50 என உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.