சீனாமீதான வர்த்தகப்போரை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

 

சீனாமீதான வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் வர்த்தக போர் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்க பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து அவர் அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க தொடங்கினார். இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்தது.

இதனால் அமெரிக்கா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் தொடங்கியது.

அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எரிபொருள், உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை வளர்ந்து வரும் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் எதிர்கொண்டுள்ளன.

இதற்கிடையே ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து புதிய வரி விதிப்பை இரு நாடுகளும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன.இந்நிலையில், சீனாவிற்கான பரஸ்பர வரிவிதிப்பிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்னும் 90 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்துள்ளார். இதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Latest Articles