ஜப்பானில் தொழில்வாய்ப்பைப் பெற்றுத்தருவதாக கூறி இளைஞரொருவரிடம் 870,000.00 நிதியை மோசடி செய்த பெண்ணொருவரை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வெ ளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜப்பானில் தொழிற்சாலைகளில் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி அளுத்கம தர்காநகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரிடம் மேற்படி பெண்மணி பணத்தைப் பெற்றுள்ளார். எனினும், உறுதியளித்தபடி அப்பெண் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவில்லை. இதுதொடர்பில் அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து, நடவடிக்கைகளை மேற்கொண்ட அந்த பணியகத்தின் விசாரணை அதிகாரிகள் கடந்த (12) பெண்மணி வசிக்கும் கந்தானை பகுதிக்குச் சென்று அவரைக் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர் அன்றைய தினமே களுத்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டு 10,00,000 ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
மேலதிக விசாரணையை எதிர்வரும் மார்ச் (24) நடத்துவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.










