முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சையின்போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா எனும் 12 வயது சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார்.
அந்தச் சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி இன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வைத்தியசாலைப் பணிப்பாளரை குறித்த இடத்துக்கு வரவழைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரணம் தொடர்பில் கேள்வி எழுப்பியமையுடன், டினோஜாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தொடர்ந்து சிறுமியின் சந்தேகத்துக்கிடமான மரணத்துக்கு நீதியைப் பெற்றுத் தருமாறும் இதன்போது மக்களால் மகஜர்களும் கைளிக்கப்பட்டன.
அதேநேரம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடமும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
