25 ஆவது நாளாக தொடரும் தாக்குதல்: ஈரானில் 208 குழந்தைகள் பலி!

மத்திய கிழக்கு போர்ச்சூழல் இன்று (24) 25ஆவது நாளாக தொடர்கின்றது.

ஈரான்மீதான தாக்குதல்கள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தாலும், ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

மறுபுறத்தில் இஸ்ரேல்மீது ஈரானும் ஏவுகணைத் தாக்குதல் நடத்திவருகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானில் 208 குழந்தைகள் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஈரானின் அவசரக்கால சேவைத் துறை மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

போர் தொடங்கியவேளை மினாப் நகரில் உள்ள பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 168 சிறுமிகள் பலியாகியுள்ளனர்.

போரால் ஈரானில் 1,500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதேவேளை, இஸ்ரேல் தாக்குதலில் லெபனானிலும் குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன கடந்த 28 ஆம் திகதி தாக்குதலை ஆரம்பித்திருந்தன.

Related Articles

Latest Articles