தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: புள்ளி வழங்கலில் புதிய முறை

புதிய கல்வி மறுசீரமைப்பின்படி தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் புள்ளிகள் வழங்கப்படும் போது பரீட்சையில் பெற்றுக்கொள்ளப்படும் புள்ளிகள் மாத்திரமன்றி 30 வீத புள்ளிகள் 04 – -05ஆம் வகுப்புகளில் மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளை அடிப்படையாக வைத்தே வழங்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

அதனை முறையாக மதிப்பீடு செய்வது ஆசிரியர்களின் பொறுப்பு என்பதுடன் பாடசாலை சபை மூலம் அவை கண்காணிப்பு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிலாபம், நாத்தாண்டி, தம்மிஸ்ஸர மகா வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடிக் கட்டடமொன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி மறுசீரமைப்பின்போது 01,06,10 ஆகிய வகுப்புகளை உள்ளடக்கி முன்னோடித் திட்டம் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கணிதம், இரசாயன விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், சிங்களம், ஆங்கிலம், தமிழ் மொழி, தொழில்நுட்பம், சர்வதேச மொழிகள் ஆகிய பாடங்களுக்கு 2,500 ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பட்டதாரிகள் அனைவரும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதையடுத்து அவர்களுக்கான நேர்முகப் பரீட்சை தற்போது நடத்தப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் மாணவர்களுக்கு திறமையான ஆசிரியர்கள் கிடைக்கவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles