தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் பலி: இருவர் கைது!

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் தம்பலகாமம், கோயிலடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கந்தசாமி பேரின்பராசா (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார் என்று தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு நண்பர்களுக்கிடையில் குடிபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில் அது கைகலப்பாக மாறி இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த மேற்படி நபர், தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தம்பலகாமம், கோயிலடிப் பகுதியைச்  சேர்ந்த 22, 36 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles