திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பம் – அனுமதிக்க முடியாது என்கிறார் சரத் வீரசேகர

“பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது” – என்று கடும் துவேசத்துடன் கருத்து வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர.

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நிவைவேந்தல் நிகழ்வு இன்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இலங்கை பௌத்த – சிங்கள நாடு. இந்த நாட்டுக்குள்தான் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அமைந்துள்ளன. வடக்கு, கிழக்கு வேறு நாடு அல்ல. அந்த மாகாணங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவையும் அல்ல.

வடக்கு, கிழக்கில் புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது.

தமிழ் மக்களும், அவர்களின் பிரதிநிதிகளும் நாட்டிலுள்ள சட்டங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். சட்டங்களை மீறினால் அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்” – என்றார்.

Related Articles

Latest Articles