” தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நான்கு விதமான அணுகுமுறைகளைக் கையாள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
” வடக்கு, கிழக்கு மக்கள் தமக்கான அரசியல் தீர்வுக்காக 7 சதாப்தங்களுக்கு மேல் காத்திருக்கின்றனர். இது தொடர்பில் கடந்தகாலங்களில் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அவை நடைமுறைக்கு வரவில்லை.
எனவே, எதிர்வரும் காலங்களில் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நான்கு விதமான அணுகுமுறைகளைக் கையாள்வதற்கு தீர்மானித்துள்ளோம்.
முதலாவதாக மக்கள் எதிர்நோக்கும் பொதுப்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும், இரண்டாவதாக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தனித்துவமான பிரச்சினைகள் உள்ளன. தமிழர் என்ற காரணத்துக்காக புறக்கணிப்பு, மொழி ரீதியிலான பாகுபாடு என்பவற்றுக்கும் படிப்படியாக தீர்வு காணப்பட வேண்டும். 76 வருடங்களாக புரையோடிப்போயுள்ள பிரச்சினைக்கு 70 நாட்களில் தீர்வைக் கண்டுவிடமுடியாது.
மூன்றாவதாக மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் நடத்தப்படும். அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின்கீழ்வரும் மாகாணசபை முறைமை நீண்டுநிலைக்கக்கூடிய நிரந்தர தீர்வு என நாம் நம்பவில்லை. எனினும், மாகாணசபை முறைமையை தமக்கு கிடைத்த உரிமையாக தமிழ் மக்கள் நம்புகின்றனர். எனவேதான் மாகாணசபை முறைமைமீது கைவைக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாணசபை முறைமையை அர்த்தமுள்ள முறைமையாக மாற்றயமைப்போம்.
நான்காவது புதிய அரசமைப்பு இயற்றப்படும். மக்கள் நலனை முன்னிறுத்தி கடந்தகாலங்களில் அரசியல் மறுசீரமைப்பு இடம்பெறவில்லை. ஆளுங்கட்சிகளின் தேவைப்பாடுகளுக்கு அமையவே திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. எனவே, அனைத்து இன மக்களையும் ஒன்றுதிரட்டி, நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு அரசமைப்பை இயற்றுவதற்கு எதிர்பார்க்கின்றோம். இனவாதத்தக்கு முடிவுகட்டி, சகோதரத்துவம் கட்டியெழுப்பப்படும். ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் செய்யப்படும். மக்களின் தனித்துவம் பாதுகாக்கப்படும்.” –
என்றார்.