தேயிலை மலைகளில் கருப்பந்தைலம் மரங்களை நடுவதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு

உடப்புஸல்லாவை எனிக் மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலை மரங்கள் பயிரிடக்கூடிய மலைகளில், கருப்பன்டெயில் மரக்கன்றுகளை நடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனிக்தோட்ட தொழிலாளர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .இம்மலைகளில், கருப்பந்தைலம் மரக்கன்றுகள் நடுவதை நிறுத்தாவிட்டால் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக எனிக்தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதாவது, இத்தோட்டத்தில் தேயிலை தொழிலை வாழ்வாதாரமாக நம்பி சுமார் எழுபது தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.

எனவே,தேயிலை உற்பத்தியையே நிர்வாகம் ஊக்குவிக்க வேண்டும்.மாறாக தேயிலை மலைகளில் கருப்பன்டெயில் மரங்களை நடுவது தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமமானது.

அதிக இலாபத்தை ஈட்டும் நோக்கில் இச்செயலில் இறங்குவதை வன்மையாக கண்டிக்கிறோம். இலக்கம் 12 A,மற்றும் இலக்கம் 15 ஆகிய 16 ஹெக்டேயர் தேயிலைகளில் கருப்பந்தைலம் மரக்கன்றுகளை நடுவதற்கு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இந்த திட்டத்தில் இம்மரக்கன்றுகளை நடுவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை தொழிலாளர்கள் நிராகரித்துள்ளனர்.

இந்த நிலங்களில், மீண்டும் தேயிலை கன்றுகளை மீள் நடுகைகள் செய்ய வேண்டும் என்பதே தொழிலாளர்ளின் விருப்பம். தோட்ட நிர்வாகத்திற்கு தொழிலாளர்கள் இதை உணர்த்தியும் உள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் உடப்புஸல்லாவை பிரதேச தொழிற்சங்க காரியாலங்களிலுள்ள மக்கள் பிரதி நிதிகளிடம் வினவப்பட்டது.

மரம் நடுகை தொடர்பில் கம்பனியிடமே பேசித் தீர்வு பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இவ்விடயத்தை, இ.தொ.காவின் உயர் மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஆ.ரமேஸ்

Related Articles

Latest Articles