சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவம் உட்பட விகாதாசார தேர்தல் முறைமையிலுள்ள சாதகமான விடயங்களை பாதுகாத்துக்கொண்டே தேர்தலை முறைமை மாற்றியமைக்கப்படும் – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தேர்தல் முறைமை தொடர்பில் பிரச்சினை இருக்கின்றது.
குறிப்பாக 2017 இல் கடந்த அரசால் முன்வைக்கப்பட்ட மாகாணசபை தேர்தல் திருத்தச்சட்டமானது, பல முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது. எனவே, முதலில் அதனை சரிசெய்ய வேண்டும்.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சிமன்றத் தேர்தல் என நான்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

முழு இலங்கையும் ஒரு தொகுதியாக கருதப்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகின்றது. உலகளவில் இந்த முறைமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலானது முழுமையாக விகிதாசார முறைமையின்கீழ் இடம்பெறுகின்றது. கடந்த அரசால் முன்வைக்கப்பட்ட திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைத் தேர்தலை 50 இற்கு 50 என்ற அடிப்படையில் விகிசாதார மற்றும் கலப்பு முறையில் நடத்துவதற்கு ஏற்பாடு இடம்பெற்றது. அதேபோல உள்ளாட்சிசபைத் தேர்தலை 60 இற்கு (தொகுதி) 40 (விகிதாசாரம்) என்ற வகையில் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நான்கு தேர்தல்களும் இவ்வாறு நான்கு விதத்தில் நடத்தப்படுகின்றமை நகைச்சுவைத்தனமாகும். எனவேதான் தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
ஜே.ஆர். ஜயவர்தனவால் முன்வைக்கப்பட்ட விகிதாசார தேர்தல் முறைமையில் சில சாதகமான விடயங்களும் உள்ளன. அதனை நாம் மறந்துவிடமுடியாது. குறிப்பாக சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டது. இது வரவேற்கக்கூடிய விடயம். எனவே, விகிசாதார தேர்தல் முறைமையிலுள்ள சாதகமான விடயங்களை பாதுகாத்துக்கொண்டு தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்படும்.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாக குறிப்பிடமுடியாது.
தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்ட பின்னரே மாகாண தேர்தல் நடத்தப்படக்கூடும். இவ்வருடத்துக்குள் அதனை செய்யமுடியாது.” – என்றார்.
