சர்வதேச விசாரணைகளுக்கானசாட்சியமே செம்மணிப் புதைகுழி

“ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கோ, போர்க்குற்றங்களுக்கோ முள்ளிவாய்க்காலை மட்டும் சாட்சியமாகக் கொள்ள முடியாது. ஆனால், இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் 1948களிலிருந்து இன்று வரை ஈழத்தமிழர்கள் மீது பௌத்த மேலாதிக்கவாதிகளால் புரியப்பட்ட மிக மோசமான படுகொலைகளுக்கான பிரதான சாட்சியமாக முள்ளிவாய்க்காலைப் போன்று, செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை அடையாளப்படுத்தப்படுத்த முடியும்.”

– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் நேற்று வரை 52 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழப்படும் பகுதிகளில் இருந்து மழைநீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட கால்வாய்களில் கூட மூன்று இடங்களில் என்புச் சிதிலங்கள் தென்பட்டுள்ளன என்றால் இனப்படுகொலைக்கான வலுவான சாட்சியமாக அந்த மனிதப் புதைகுழியை அடையாளப்படுத்த முடியும். ஆனால், எழுபது ஆண்டு காலமாகத் தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியோடு நிறுத்திக்கொள்ள இந்த அரசும் தன்னாலான பிரயத்தனங்களை முன்னெடுக்கக்கூடும் என்ற அடிப்படையில், இன அழிப்புக்கான பொறுப்புக்கூறலும் பரிகார நீதியும் பரந்துபட்ட அளவில் அணுகப்பட வேண்டும் என்பதில் நாமும், நீதியை நாடும் எல்லாத் தரப்புகளும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும்.

உலகின் மனச்சாட்சியை உலுக்கும் உணர்வு சார்ந்த படுகொலை அடையாளமான செம்மணி மனிதப் புதைகுழியோடு, மன்னார், கொக்குத்தொடுவாய், திருக்கேதீஸ்வரம், மண்டைதீவு உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் முறையான நீதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில் 2009 ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட போது, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டும், கொகல்லப்பட்டும் உள்ளதாக அப்போதைய மன்னார் மறைமாவட்ட ஆயர் மறைந்த இராஜப்பு ஜோசப் வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைகளுக்கான அடிப்படையாக செம்மணி மனிதப்  புதைகுழி விவகாரம் அணுகப்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles