” ஜனவரி மாத இறுதிக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தீர்வு கிட்டும்.” – என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்ட கிளை நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
” நாட்டுக்கு பொருளாதார ரீதியில் பங்காற்றிவரும் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற வேண்டுகோள்களை என்னால் முடிந்தவரை நிறைவேற்றியுள்ளேன்.
அந்தவகையில் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தனது உரையில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் விரைவில் தீர்வு ஒன்றை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இவரின் வேண்டுகோள் இம்மாத இறுதிக்குள் நிறைவேறும் என நம்பிக்கை உள்ளது. இந்த விடயம் தொடர்பாக சகல தரப்புகளும் கலந்துரையாடவுள்ளதுடன், பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேசவுள்ளேன்.
எனவே, இம்மாத இறுதிக்குள் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தீர்வு கிடைக்கும்.” – என்றார்.










