மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ நாட்டில் பொருட்களின் விலைகள் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் வாழ்க்கை சுமையை தாங்க முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பலர் வெளிநாடு செல்கின்றனர். இந்த நடைமுறைச் சிக்கலை தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாவை வைத்து எப்படி வாழ்வது? எனவே, பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சு நடத்தி அரசு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். சாதாரணமாக 2 ஆயிரம் ரூபா கிடைத்தால்தான் ஓரளவு சமாளிக்க முடியும்.” எனவும் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
