” மக்கள் சக்தி ஊடாக ஜனநாயக வழியிலான ஆட்சிமாற்றத்தையே நாம் எதிர்ப்பார்க்கின்றோம். அதற்கான நடவடிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் விசேட மாநாடு இன்று பதுளையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு அறிவிப்பு விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்த அரசு நாட்டை சீரழித்துள்ளது. தன்னால் முடியாது என்பதை செயல்கள் ஊடாக ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், உறுப்பினர்களை வளைத்துபோட்டு, ஆட்சிமாற்றம் செய்யும் நடைமுறை எமக்கு பொருந்தாது. ஜனநாயக வழியிலான மாற்றமே தேவை. அதற்கான வலியுறுத்தல் கொடுக்கப்படும்.
அதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கப்படும். அவர்களை கூலித்தொழிலாளர்களாக வைத்திருக்காமல், சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். லயன் யுகத்துக்கு முழுமையாக முடிவு கட்டப்படும். நிலையான வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்படும்.” – என்றார்.
