தேசிய இளைஞர் தினத்தில் நாடளாவிய ரீதியில் “Say No” போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்!
கொழும்பு: தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டங்கள் இம்முறை போதைப்பொருள் ஒழிப்பை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு வருடமும் மே மாதம் 23ஆம் திகதி தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1999ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி, குருநாகல் மாவட்டத்தின் மாளிகாபிட்டிய விளையாட்டு மைதானத்தில் வைத்து இத்தினம் தேசிய இளைஞர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இம்முறை இவ் இளைஞர் தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமொன்றைச் நடைமுறைப்படுத்துவதற்குத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், இலங்கை இளைஞர் கழகச் சம்மேளனமும் (Youth Club) இணைந்து ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றக் கூட்ட மண்டபத்தில் நேற்று (2026.05.18) நடைபெற்றது.
இதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, இலங்கை இளைஞர் கழகச் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரவிந்து இந்திவர மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடகப் பிரிவு அதிகாரியும் உத்தியோகபூர்வ தமிழ் அறிவிப்பாளருமான சுப்பையா சிவராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வு தொடர்பான விபரங்களைத் தெளிவுபடுத்தினர்.

இம்முறை தேசிய இளைஞர் தினம் “முழு நாடும் ஒன்றாக” என்னும் தொனிப்பொருளின் கீழ், ‘Say No’ என்ற எண்ணக்கருவுடன் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமாகக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நாட்டின் சகல பாகங்களிலும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 26 நிர்வாக மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் இளைஞர் விழிப்புணர்வு நடைபவணி மற்றும் பேரணிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய இளைஞர் கழகங்களின் அங்கத்தவர்களுடன், பிரதேச இளைஞர் கழகச் சம்மேளனம் மற்றும் மாவட்ட இளைஞர் கழகச் சம்மேளனம் ஆகியன இணைந்து, 250-க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளின் பங்கேற்புடன் இந்நிகழ்வை நடத்தவுள்ளன.
போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள், துண்டுப்பிரசுரங்கள், வீதி நாடகங்கள், பேனர்கள் மற்றும் பல வினைத்திறன் மிக்க அம்சங்களுடன் இளைஞர், யுவதிகள் நடைபவணியாகவும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய வாகனப் பேரணிகளாகவும் சென்று பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கவுள்ளனர்.
தற்காலத்தில், இளைஞர்கள் மத்தியில் தீவிரமாக வியாபித்துக் கிடக்கும் போதைப்பொருள் பாவனை அச்சுறுத்தல் காரணமாக, பெற்றோர்கள் தமது பிள்ளைகளைக் கல்வி நடவடிக்கைகளுக்காகவோ, தொழில் நிமித்தமோ அல்லது ஏனைய விடயங்களுக்காகவோ வெளியில் தனியாக அனுப்ப அச்சப்படுகின்றனர்.
போதைப்பொருள் பாவனையினால் நாட்டின் எதிர்கால சமூக, பொருளாதார, சுகாதார, கல்வி அபிவிருத்தி மற்றும் சமூகக் கலாசாரம், மனிதநேயம் முதலியன கேள்விக்குறியாகியுள்ளன.
எனவே, இதனை காலத்தின் தேவையாகக் கருதி, இம்முறை ‘Say No’ போதைப்பொருள் ஒழிப்பு எண்ணக்கருவுடன், எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுப் பேரணிகள் நாடளாவிய ரீதியில் வெகுவிமரிசையாக நடத்தப்படவுள்ளதாக குறித்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
