நானுஓயா − ரதல்ல குறுக்கு வீதியில் தடையை மீறி கனரக வாகனங்கள் செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வீதியில் தொடர்ச்சியாக வீதி விபத்துகள் ஏற்பட்டு வந்தமையால் ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா−ரதல்ல குறுக்கு வீதியில் பயணிக்க தடைவிதிக்கப்பட்டது.
5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதமளவில் கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பஸ், வான் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் மோதுண்டதில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்திருந்தனர். இதன்பின்னர் மிகவும் செங்குத்தான இவ்வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது, விபத்தின் பின்னர் தொடர்ந்து ஒருமாதம் நானுஓயா, லிந்துலை பொலிஸார் கனரக வாகனங்கள் செல்வதை தடுப்பதற்காக அதிதீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது பொலிஸார் கடமையில் இல்லாத காரணத்தால் இரவு மற்றும் பகல் நேரங்களில் தடைகளை மீறி கனரக வாகனங்கள் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வீதியோரத்தில் அமைந்துள்ள நு/ நாவலர் பாடசாலை மாணவர்களும், இப்பகுதியில் வசிக்கும் பிரதேசவாசிகளும், ஏனைய வாகன சாரதிகளும் கனரக வாகனங்கள் சென்று வருவதை பொலிஸார் கண்காணிப்பதில்லையென குற்றம் சுமத்தி வருகின்றனர் .
தொடர்ந்து எதிர்காலத்தில் இடம்பெறும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும், வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்தி மாணவர்கள் உட்பட அனைத்து பயணிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










