நினைவேந்தலை தடுத்து தமிழர்களின் மனங்களை மேலும் புண்படுத்த வேண்டாம்

வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கைது செய்து அவர்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று அரசிடம் கோரியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

திருகோணமலை, மூதூர் – சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியமைக்காக நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்குக் கண்டனம் தெரிவித்துக் கருத்து வெளியிடும்போதே மைத்திரிபால மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் இடம்பெற்ற போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்தி அஞ்சலிக்க அவர்களின் உறவுகளுக்கு முழு உரித்து உண்டு. அதை இன ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ பிரித்துப் பார்க்க முடியாது.

எனவே, இறுதிப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை அவர்களின் உறவுகள் நினைவேந்த அரசு அனுமதிக்க வேண்டும். அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடி எந்தத் தடை உத்தரவுகளையும் அரசு விதிக்கக்கூடாது.

வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கைது செய்து அவர்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

நினைவேந்தல் நிகழ்வைக் காரணம் காட்டி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது ஆட்சியில் – நல்லாட்சி அரசில் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நடத்த அனுமதி வழங்கியிருந்தேன். உயிரிழந்தவர்களை வைத்து இன ரீதியில் – மத ரீதியில் அரசியல் நடத்தும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை.” – என்றார்.

Related Articles

Latest Articles