விளையாட்டு அமைச்சு 47 ஆவது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட மட்டப் பெண்கள் அணிகளுக்கிடையில் நடத்திய கரப்பந்தாட்டப் போட்டியில், பதுளை மாவட்டப் போட்டிகளில் ஹாலிஎல பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துப்படுத்திப் பங்குபற்றிய “விரியும் சிறகுகள்” பெண்கள் அணி முதலாம் இடத்தைப் பெற்று தொடர்ந்து 12 ஆவது முறையாக பதுளை மாவட்டத்தில் சம்பியனாகியுள்ளது.
பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்கள் மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதலாம் இடம் பெற்ற பெண்கள் கரப்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டன.
போட்டிகளில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய “விரியும் சிறகுகள்” அணியினர் அரையிறுதிப் போட்டியில் வெளிமடைப் பிரதேச செயலக அணியுடன் மோதி முதல் இரு சுற்றுகளிலும் 25 இற்கு 07, 25 இற்கு 05 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிப் பெற்று, இறுதிப் போட்டியில் வியலுவ பிரதேச செயலக அணியை முதல் இரு சுற்றுகளிலும் 25இற்கு 08, 25 இற்கு 13 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிக் கொண்டு சம்பியன் பட்டத்தை சுவீகரித்தனர்.
இவ்வணியில் (இடமிருந்து வலமாக கனகநாதன் (உதவி பயிற்றுவிப்பாளர்), எம். தனுசிகா, கே.லசினியா (அணித் தலைவி) , எம்.சிறிகாந்தி, ஜெ. திலக்க்ஷனா ,எம்.திலக்ஸனி, டி.சாலினி, டி.மகேஸ், எஸ்.கிருஷாந்தி, அணியின் பயிற்றுவிப்பாளரும், வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலய அதிபருமான என்.சுந்தரராஜ் ஆகியோரைப் படங்களில் காணலாம். இவ்வணியினர் தேசிய மட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.