தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்கள் நிச்சயம் பாதுகாக்கப்படுவார்கள். காணி உட்பட அவர்களுக்குரிய உரிமை வழங்கப்படும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை, கம்பனிகள் இன்னும் மனிதர்களாக அணுகவில்லை. உழைப்பு மாத்திரமே உறிஞ்சப்பட்டுவருகின்றது.
காவத்தை பெருந்தோட்டக் கம்பனி ஒப்பந்த அடிப்படையில் வைத்துள்ள தனியார் பாதுகாப்பு ஊழியர்கள், நீலகாமம் தோட்டப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட குடிசை வீடு அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கிருந்தவர்கள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சட்டரீதியாக கையாளப்பட வேண்டிய விடயத்தில் வன்முறை கையாளப்பட்டதை அனுமதிக்க முடியாது.
சம்பவம் தொடர்பில் அறிந்த பின்னர் நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். 9 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவன பிரதானிகளை அமைச்சுக்கு அழைத்து கலந்துரையாடி இருந்தோம்.
எனவே, எமது தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்கள் பாதுகாக்கப்படுவார்கள். உரிமை வழங்கப்படும். காணி உரிமை வழங்குவதுதான் உறுதியான தீர்வாக அமையும்.
எதிர்வரும் காலங்களில். நீலகாமம் தோட்டத்தில் நடந்ததுபோல வேறு எங்கும் நடக்காது என்பதற்குரிய உத்தரவாதத்தை வழங்குகின்றோம்.’ – என்றார்.










