பஸிலின் ஆட்டத்துக்கு முடிவு கட்டினால்தான் நாமலுக்கு எதிர்காலம் உள்ளது – விமல்

” பஸில் ராஜபக்ச என்பவர் அரசியல் சூழ்ச்சிக்காரர். மஹிந்தவுக்கு எதிராகவே தேர்தலில் போட்டியிட்டவர். எனவே, அவரின் அரசியல் ஆட்டத்துக்கு முடிவு கட்டாவிட்டால் நாமல் ராஜபக்சவுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது.” – என்று  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இரட்டை குடியுரிமைக் கொண்ட பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம். புதிய அரசமைப்பு ஊடாக இதற்கான ஏற்பாடு செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார். அதனை நம்பினோம். ஆனால் அந்த உறுதிமொழி மீறப்பட்டது.

பஸில் ராஜபக்ச என்பவர் சூழ்ச்சிக்காரர். நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுபவர். காமினி திஸாநாயக்க காலத்தில் மஹிந்தவுக்கு எதிராக தங்காலையில் போட்டியிட்டவர் அவர். 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரியவர். அதற்கு மஹிந்த ராஜபக்ச உடன்படவில்லை.

பஸில் சொல்வதை கேட்டப்படி, நாமல் ராஜபக்ச மௌனம் காத்தால், அவருக்கான அரசியல் எதிர்காலம் இல்லாமல் போய்விடும்.” – என்றார் விமல்.

Related Articles

Latest Articles