ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஹேவாஹெட்ட , ஹோப் தோட்டத்துக்கு செல்லும் பாதையில் உள்ள சிறிய பாலமொன்று சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மேற்படி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவரும் நிலையிலேயே இப்பாலம் பகுதியளவு சேதமடைந்துள்ளது. அதனை உடன் புனரமைக்காவிட்டால் பாலம் முழுமையாக சேதமடையும் அபாயம் இருப்பதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாற்றுவழி இல்லாததால் தற்போது ஆட்டோ உட்பட சிறிய ரக வாகனங்கள் மட்டுமே இப்பாலத்தின் ஊடாக, பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பயணிப்பதாகவும் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இப்பாலத்தை புனரமைத்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஹோப் தோட்ட மக்கள், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.










