புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி ஆரம்பமாகும் திகதி தொடர்பில் அமைச்சரவையில் இன்னும் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதிவழங்கி இருந்தது. அதன் தற்போதைய நிலை என்னவென்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
” அப்பணியை முன்னெடுப்பதற்குரிய திகதி விவரம் அமைச்சரவையில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. கொள்கை அளவில் எடுக்கப்பட்ட தீர்மானம் அவ்வாறே உள்ளது. ஆரம்ப மற்றும் முடிவு திகதி பற்றி இன்னும் ஆராயப்படவில்லை. எது எப்படி இருந்தாலும் புதிய அரசியலமைப்பு நிச்சயம் நிறைவேற்றப்படும் என்பது உறுதி.” – என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த நீதி அமைச்சர்,
” புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போதே இதற்குரிய பணியும் இடம்பெறும். கால எல்லை தொடர்பில் உறுதிமொழியை வழங்குவதே எனக்கு கஷ்டமாக உள்ளது. எனினும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் நடவடிக்கை இடம்பெறும்.” – என்றார்.