பெருந்தோட்ட மக்களுக்கு முகவரிகோரி சபையில் பிரேரணை முன்வைப்பு – முகவரி இல்லாததால் ஏற்படும் அவலங்கள் பற்றியும் எடுத்துரைப்பு

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தர முகவரியொன்றை வழங்குவதற்கு உரிய – ஏற்புடைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” லயன் வீடுகளில் வாழ்பவர்கள் வேலைதேடி விண்ணப்பமொன்றை அனுப்பியிருந்தால், அதற்கு பதில் கடிதம் வரும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் தோட்டத்தில் தொழில் செய்யவில்லையெனில் கடிதம் வழங்கப்படுவதில்லை. இதனால் தொழில் வாய்ப்புகளை இழந்தோர் ஏராளம்.

சிலவேளை அப்பகுதியில் உள்ள கடையொன்றின் முகவரி வழங்கப்பட்டிருக்கலாம். கடை முதலாளிக்கு சம்பந்தப்பட்டவர்களுடன் முரண்பாடுஎனில் அவரும் கடிதத்தை கையளிக்கமாட்டார்.
200 வருடங்களாகவே அம்மக்களுக்கு அப்படியான அவலநிலை தொடர்கின்றது.

15 – 10 அடி லயன் காம்பராவில் நான்கு தறைமுறைகள் வாழ்ந்துவிட்டன. ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால்கூட நிர்வாகத்தின் அனுமதி தேவை. முகவரி இல்லாததால் தோட்டத்துக்குள் கடையொன்றைபோட்டு சுயதொழிலை முன்னெடுக்க முடியாத நிலையும் காணப்படுகின்றது.

எனவே, பெருந்தோட்ட நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.குறைந்தபட்சம் முகவரியையாவது வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனை செய்ய வேண்டியது அனைவரினதும் கடமையாகும். ” – என்றார்.

Related Articles

Latest Articles